Published : 30 Jan 2014 09:50 AM
Last Updated : 30 Jan 2014 09:50 AM

அதிமுக பிரமுகர் கொலையில் எம்.எல்.ஏ கணவர் உட்பட 10 பேர் மீது வழக்கு

அதிமுக பிரமுகர் ராஜகோபால், பெட்ரோல் குண்டு வீசியும், அறிவாளால் வெட்டியும் செவ்வாய்க்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக மதுராந்தகம் அதிமுக எம்எல்ஏ கணிதாவின் கணவர் சம்பத் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த குண்டூரைச் சேர்ந்தவர் ராஜகோபால் (52). காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அதிமுக பிரதிநிதி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி ஜெயா, கடந்தமுறை செங்கல்பட்டு நகரமன்றத் தலைவியாக இருந்தார். 2-வது மனைவி மல்லிகா, திருமணி ஊராட்சி துணைத் தலைவியாக உள்ளார். ஜெயாவின் மகன் செந்தில்குமார், செங்கல்பட்டில் நகரமன்ற உறுப்பினராக உள்ளார்.

ராஜகோபால் செவ்வாய்க் கிழமை இரவு, மோட்டார் சைக்கிளில், அரசு பொது மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக் கிளில் வந்த இருவர், அவர்கள் கொண்டு வந்த பெட்ரோல் வெடிகுண்டை மோட்டார் சைக்கிள் மீது வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது. ராஜகோபாலின் ஆடைகள் மீதும் தீப்பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு ஓடிய ராஜகோபாலை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவர்கள் கொண்டு வந்த அறிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்பு துறையினரால் எரிந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அணைக்கப்பட்டது. இது குறித்து செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஆதரவாளர்கள் சாலை மறியல்:

புதன்கிழமை காலை ராஜ கோபாலின் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், உறவினர்கள் உடலைப் பெற மறுத்து, கொலை யாளிகளை கைதுசெய்ய வலி யுறுத்தி, மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் விரைவில் கைது செய்வதாக உறுதியளித்ததன் பேரில், உறவினர்களை மறி யலைக் கைவிட்டனர்.

10 பேர் மீது வழக்கு

புகாரின் பேரில், அதிமுக பிரமுகரும், அதிமுக எம்எல்ஏ கணிதாவின் கணவருமான சம்பத் உள்ளிட்ட 10 பேர் மீது செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை சம்பவத்தின்போது, ராஜகோபால் மீது, பெட் ரோல் வெடிகுண்டோடு, நாட்டு வெடிகுண்டும் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

கொலை வழக்கு

ராஜகோபால் மீது கடந்த 1980-ம் ஆண்டு முதல் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவை எல்லாவற்றிலும் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தற்போது, இவர் மீது கடந்த 2004-ம் ஆண்டு, மணல் திருட்டை தடுக்க முயன்ற வட்டாட்சியரை லாரி ஏற்றி கொலை செய்த வழக்கு மட்டும் செங்கல்பட்டு தாலுக்கா போலீஸில் நிலுவையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x