Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM

பாஜக மீது நம்பிக்கை உள்ளது: புதுவை முதல்வர் ரங்கசாமி பேட்டி

பாஜக மீது நம்பிக்கையுள்ளது; எங்களின் கோரிக்கைகளை அக்கட்சி நிறைவேற்றும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை மாலை தலைமை தேர்தல் அலுவலகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் முதல்முறையாக கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தார். கட்சி அலுவலகத்திலுள்ள சாமி படங்களுக்கு ரங்கசாமி பூஜை செய்தார். அதன்பின்னர் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு என்னென்ன தேவையோ அதை வலியுறுத்தி பிரசாரம் செய்வோம். பிரச்சாரத்தை விரைவில் தொடங்குவோம். பாஜக மீது நம்பிக்கையுள்ளது. எங்களின் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள். புதுச்சேரியில் பாமக தொகுதி ஒதுக்கீடு பிரச்சினை சுமூகமாக முடியும். பாஜகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்றார்.

முதல்முறை

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருந்த ராதாகிருஷ்ணன், முதல்முறையாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தார். கட்சியினர் அவரை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு,

"தற்போது கட்சியினர் அனைவரையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறேன். பிரசாரம் தொடர்பாகவும், எதை முன்வைத்து பிரசாரம் என்பதையும் முதல்வர் விரைவில் அறிவிப்பார்" என்று குறிப்பிட்டார். கட்சி அலுவலக பேனரில் ரங்கசாமியுடன் மோடியின் படம் முதல்முறையாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x