Published : 29 May 2017 09:42 AM
Last Updated : 29 May 2017 09:42 AM

புதுச்சேரி, கடலூரில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (திங்கள்கிழமை) காலை மோரா என்ற புயலாக மாறியுள்ளது.

இப்புயல் கொல்கத்தாவுக்கு 720 கி மீ தெற்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் கடும் புயலாக வலுவடைந்து நாளை (செவ்வாய்க்கிழமை) வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோல், நாகப்பட்டினம், கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் மற்றும் மழைக் காலங்களில் விடுக்கப்படும் புயல் எச்சரிக்கை சின்னங்கள் குறித்த விளக்கங்களின் விபரங்கள்.



> புயல் எச்சரிக்கை சின்னங்களின் அர்த்தம் என்ன?







* ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம். இதனால் துறைமுகம் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால் சற்றே பலமாக காற்று வீசுகிறது என்று பொருள்.

* இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையைக் கண்டால், துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற வேண்டும்.

* மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

* நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து. 3 மற்றும் 4-ம் எண் கூண்டுகள், துறைமுகத்தில் மோசமான வானிலை நிலவுவதைத் தெரியப்படுத்துகின்றன.

* ஐந்தாம் எண் கூண்டு, புயல் உருவாகி இருப்பதைக் குறிக்கிறது. அத்தோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

* ஆறாம் எண் கூண்டு, 5 வது எண்ணின் எச்சரிக்கைதான். ஆனால் துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

* ஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை. 5, 6 மற்றும் 7-ம் எண் கூண்டுகள் துறைமுகத்துக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் குறிக்கிறது.

* எட்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், 'மிகுந்த அபாயம்' என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது. அப்போது துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

* ஒன்பதாம் எண் புயல் கூண்டுக்கு, புயல், தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். மேலும் துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும்.

* பத்தாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், அதி தீவிரப் புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

* 11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x