Last Updated : 21 Nov, 2013 12:00 AM

 

Published : 21 Nov 2013 12:00 AM
Last Updated : 21 Nov 2013 12:00 AM

125 ஆண்டுகள் பழமையான புதுவை மேரி கட்டிடம் புதுப்பிக்கப்படுமா?

உள்ளூர்வாசிகளையும் சுற்றுலாப்பயணிகளையும் ஒருங்கே கவரும் புதுவையின் மேரி, இன்றைக்குக் கேட்பாரற்று சீர்குலைந்துவருகிறாள்!

கடற்கரைச் சாலையில் புதுவையின் அடையாளமாக 125 ஆண்டு கால பழமையானது, புதுவையின் மேரி என்று அழைக்கப்படும் இந்தக் கட்டிடம்.

1887-ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியில் அந்நாட்டின் கலைநுட்பத்துடன் கட்டப்பட்டது இந்தக் கட்டிடம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை, இரண்டு தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் கீழ்தளத்தில் நகராட்சி அலுவலகமும், மேல் தளத்தில் திருமணப் பதிவு, நகராட்சிக் கவுன்சில் கூட்ட அரங்குகளும் செயல்பட்டுவந்தன. பதிவுத் திருமணம் செய்வோர் பந்தி பரிமாறும் அளவுக்கு மண்டபமும் உண்டு.

இந்தக் கட்டிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால், சேதமடைந்து அபாயக் கட்டத்தை எட்டியது. முதலில் மேல் தளத்தை பயன்படுத்துவதைத் தவிர்த்து கீழ் தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அதன்பின், கீழ்த் தளமும் மோசமானதால் இங்கிருந்த அலுவலகங்கள் இடம் மாற்றப்பட்டன. சரியாக கடந்த ஆண்டு நவம்பரில் இடமாற்றும் பணிகள் தொடங்கின.

ஆணையர் அலுவலகம், வரி வசூலிப்பு அலுவலகங்கள் ஆகியன பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள கம்பன் கலையரங்கத்துக்கும், இதர அலுவலகங்கள் குபேர் மண்டபத்துக்கும் மாற்றப்பட்டன. நகராட்சி அலுவலகத்தைச் சுற்றியுள்ள சின்னச் சின்ன அறைகளில் பிறப்பு-இறப்பு சான்று தரும் அலுவலகம், திருமணப் பதிவு அலுவலகம் ஆகியவை தற்போது இயங்குகின்றன. புதுவை மேரி கட்டிடத்தில் ஒரே இடத்தில் இயங்கிய நகராட்சி அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதால், மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

புதுவை மேரி கட்டிடம் பலவீனமாக இருப்பதால், கட்டிடத்தினுள் பொது மக்கள் பார்வையிடுவதற்கு தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. கட்டிடங்களின் மேற்கூரை பல இடங்களில் மூங்கில் கம்புகளால் முட்டு தரப்பட்டுள்ளன.

இந்தக் கட்டிடத்தை புதுப்பிப்பது தொடர்பாக புதுவை அரசுத் தரப்பிலும், நகராட்சி தரப்பிலும் கேட்டோம்:

"பழமையான இந்தக் கட்டிடத்தின் உறுதித் தன்மை, சென்னை ஐஐடி மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆய்வு செய்து அறிக்கை தந்தவுடன், உலக வங்கி குழுவுக்கு அந்த அறிக்கையைத் தருவோம். அவர்களும் கட்டிடத்தை நேரடியாக ஆய்வு செய்தபின், அவர்கள் தரும் நிதியுதவியுடன் புதுவை மேரி கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியைத் தொடங்க உள்ளோம்" என்றனர்.

புதுவையின் பாரம்பரியத்தைப் போற்றும் ஆர்வலர்கள், "கடற்கரை சாலையையும் கடற்கரையையும் ஒரேநேரத்தில் பார்த்து ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது இக்கட்டிடம். ஈரோப்பியன் கிரிட்டோ ரோமன் கலை நுணுக்கத்துக்கு இக்கட்டிடம் ஒரு சாட்சி. கட்டிடத்தின் விதானங்களில் கலை நுணுக்கத்துடன் கூடிய வேலைப்பாடுகளைப் பார்க்க முடியும்.

நிதியைக் காரணம் காட்டி கட்டிடத்தைச் சீரமைப்பதில் காலதாமதம் காட்டுகின்றனர். ஒருசில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக அலுவலகங்கள் செயல்பட்ட அந்தக் கட்டிடம் இன்றைக்கு இடிபாடுகளுடன், குப்பைகூளங்களுடன் காட்சியளிக்கிறது. சீக்கிரமே அரசு முயற்சி எடுத்து அந்தக் கட்டிடத்தைப் புதுப்பித்து, அதன் பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்ற வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x