Last Updated : 17 Sep, 2016 07:55 PM

 

Published : 17 Sep 2016 07:55 PM
Last Updated : 17 Sep 2016 07:55 PM

புதுச்சேரி: நாராயணசாமிக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமிக்காக, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். முக்கிய கேபிள் எம்எஸ்ஓ இவர் என்பதால் முக்கிய செய்தி சேனல்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு சவரிபடையாச்சி வீதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜான்குமார். கேபிள் எம்எஸ்ஓ உட்பட 18-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வரும் ஜான்குமார் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தலில் போட்டியிடாமல் நாராயணசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டதால், 6 மாதத்துக்குள் அவர் ஏதாவது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில் தலைமையின் அறிவுறுத்தல்படி தன்னுடைய எம்எல்ஏ பதவியை கடந்த 15-ம் தேதி ஜான்குமார் ராஜினாமா செய்தார்.

அப்போது ஜான்குமார் பல கோடி பணம் பெற்றதாக பலர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதையடுத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய பணம் பெற்றதாக நிரூபித்தால் சொத்து முழுவதையும் எழுதி வைப்பதாக சவால் விட்டார்.

இந்நிலையில் இன்று பிற்பகலில் நெல்லித்தோப்பு சவரிபடையாட்சி வீதியில் உள்ள அவரது வீட்டோடு சேர்ந்த அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த ஆறு பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஜான்குமார் வீட்டில் இருந்ததால், அவரை வெளியே அனுப்பாமல் சோதனை நடத்தினர்.

புதுச்சேரியிலுள்ள இரு முக்கிய கேபிள் எம்எஸ்ஓவில் ஒன்றின் தலைவராக ஜான்குமார் உள்ளார். அதனால் அவர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடப்பதாக சேட்டிலைட் சேனல்களில் நேரடி செய்தி வெளியானவுடன் அதன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x