Published : 24 May 2017 02:46 PM
Last Updated : 24 May 2017 02:46 PM

பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த கோரிக்கைகள் என்ன?

பிரதமர் நரேந்திர மோடியை இன்று (புதன்கிழமை) டெல்லியில் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் முக்கியமான பிரச்னைகளில் மத்திய அரசின் தலையீட்டை கோரும் மனு ஒன்றை அளித்துள்ளார்.

பிரதமரிடம் தமிழக முதல்வர் அளித்துள்ள மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள்(சுருக்கமாக)

1. நீட் தேர்வு மசோதாவுக்கு ஒப்புதல்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று தர பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

2. தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை

தமிழகத்திற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தின் முக்கிய பகுதி ஏதேனும் ஒன்றில் விரைவில் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை

3. விவசாய இழப்பீடும், பயிர் காப்பீட்டுத் தொகையும்

மத்திய அரசின் இழப்பீட்டிற்கான பங்கான 168.66 கோடி ரூபாயினை விடுவித்து, இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், விரைவில் தமிழ்நாட்டின் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகைகளை முழுமையாக வழங்குவதற்குத் துணைபுரிய வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள், ஏற்கெனவே 2016-17 ஆம் ஆண்டில்நிலவிய கடும் வறட்சியால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்த துயரத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டு தொகையை வழங்குவதில் காலதாமதம் செய்கின்றனர்.இது விவசாயிகளின் துயரத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இழப்பீட்டுத் தொகை பெறுவது மேலும் தாமதமாகாமல் தமிழ்நாட்டில்

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரமளிக்கப்பட்ட அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் விரைந்து காப்பீட்டு நிதியை வழங்க அறிவுறுத்திடுமாறு கோரிக்கை.

4. காவிரி படுகை மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல்

காவிரி ஆற்றின் வடிநிலங்களில் நீர்ப்பாசன ஏற்பாட்டு முறைகளை மேம்படுத்துதல் மற்றும் புத்துயிரூட்டலுக்கான தமிழக அரசின் திட்டத்தை தேசியத் திட்டமாக அறிவிக்க சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை.

5. பவானிக்கு குறுக்கே அணையை தடுக்க வேண்டும்

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே கட்டும் அணைகள்/தடுப்பணைகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட அல்லது கட்டுமானத்திலுள்ள அல்லது கட்டுவதற்குக் கருதப்பட்டுள்ள திட்டப் பணிகள் குறித்து அனைத்து விவரங்களையும் அளித்திட கேரள அரசை அறிவுறுத்த வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுச் செயல்பாட்டிற்கு வரும்வரை, எவ்விதக் கட்டுமான நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்த வேண்டுமெனவும் வேண்டுகோள்

6. பம்பாறு இணைப்பு திட்டம்

தீபகற்ப ஆறுகளை இணைத்தல் திட்டத்தின் கீழ் பம்பை - அச்சன் கோவில் – வைப்பாறு நதிகளை இணைத்து இரண்டு மாநிலங்களுக்கும் பலன் தரும் என்றபோதிலும், தற்போது விரிவான திட்ட அறிக்கை ஒன்றினை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கத் தயங்குகிறது. எனவே, நாட்டின் நலன் கருதி ஒப்புதல் அளிக்கக் கேரள அரசை வலியுறுத்துமாறு பிரதமருக்கு கோரிக்கை

7. குடிமராமத்து திட்டத்திற்கு மத்திய அரசின் ஆதரவு

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை போக்கி வறட்சியற்ற மாநிலமாக மாற்றப் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், தமிழ் நாட்டிலுள்ள பாரம்பரிய நீர்நிலைகளை அதிகளவில் மீட்டெடுக்க உதவுகிற வகையில் 2017-2018 ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதியளிப்பான 300 கோடி ரூபாயுடன், மத்திய அரசும் 500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டுகோள்.

8. தமிழ்நாட்டிற்கு நிலுவையிலுள்ள மானியங்களை விரைந்து வழங்க வேண்டும்

தமிழகத்திற்கான 16,959.04 கோடி ரூபாய் (இணைப்பு) தொகைக்கான நிலுவையினங்களைக் கொண்ட திருத்தியமைக்கப்பட்ட பட்டியல் ஒன்று பிரதமரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தொகையின் பெரும்பகுதியினை முன்னதாகவே விடுவிப்பதற்கு பிரதமர் ஆவன செய்யும்படி கோரிக்கை

9. தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும்

இலங்கை படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான 135 படகுகளை விடுவித்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து இந்திய மீனவர்கள் பாக் விரிகுடா பகுதியில் மீன் பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமையைப் பாதுகாப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர்களைத் துன்புறுத்தும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பிரதமரிடம் வலியுறுத்தல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x