Published : 13 Oct 2014 02:43 PM
Last Updated : 13 Oct 2014 02:43 PM

நோட்டுப் புத்தகங்களில் ஜெயலலிதா உருவப்படத்தை அகற்றுக: ராமதாஸ்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நோட்டுப் புத்தகங்களில் ஜெயலலிதா உருவப்படத்தை அகற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் முதல் பருவ விடுமுறை முடிவடைந்து கடந்த 8-ஆம் தேதி திறக்கப்பட்டன. இந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்ட நோட்டுப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, கடந்த ஜூன் மாதத்திலேயே வழங்கப்பட்டிருக்க வேண்டிய பள்ளிக் கையேடு பல மாவட்டங்களில் இப்போது தான் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ஜெயலலிதா படங்கள் உள்ளன.

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவித்ததற்காக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தற்போது ஊழலின் அடையாளமாக மாறியிருக்கிறார். இப்படிப்பட்டவரின் புகைப்படத்தை பாடங்களைக் குறிப்பு எடுப்பதற்கான நோட்டுப் புத்தகத்தின் அட்டையில் அச்சிட்டு வழங்கும் போது, அது அந்த நோட்டுகளைப் பயன்படுத்தும் மாணவர்கள் மத்தியில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் செயல் ஆகும்.

இதை அறிந்தும் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் புகைப்படம் அச்சிடப்பட்ட நோட்டுப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கிய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். இந்த நோட்டுகள் ஜெயலலிதா தண்டிக்கப்படுவதற்கு முன்பாக அச்சிடப்பட்டவை; அதனால் தான் ஜெயலலிதாவின் படத்தை அகற்ற முடியவில்லை என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டால், அது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கமாகவே இருக்கும்.

2011-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சமச்சீர் கல்வி முறையை முடக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அவரது முயற்சிகள் உச்சநீதிமன்றத்தில் முறியடிக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி சமச்சீர் கல்விமுறையை செயல்படுத்தினார். அப்போது, ஏற்கனவே அச்சிடப்பட்டிருந்த அனைத்து வகுப்புகளுக்குமான தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய பாடநூல்களில் இடம் பெற்றிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செம்மொழி வாழ்த்து, செம்மொழி மாநாடு குறித்த குறிப்புகள், புகைப்படங்கள் போன்றவை ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த பச்சை வண்ண ஸ்டிக்கரைக் கொண்டு மறைக்கப்பட்டன.

நாடகக் கலைக்கு அண்ணா, கருணாநிதி, என்.எஸ். கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆற்றிய பங்குகள் குறித்த வரிகளும், மேலும் பல பத்திகளும் கறுப்பு மையால் மறைக்கப்பட்டன. செம்மொழி வாழ்த்தை மறைப்பதில் காட்டிய ஆர்வத்தையும், வேகத்தையும் ஊழல் குற்றவாளியின் படத்தை அகற்றுவதில் காட்ட மறுக்கும் ஆட்சியாளர்கள் தமிழகத்திற்கு கிடைத்த சாபக்கேடு ஆவர்.

ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு இன்றுடன் 17 நாட்கள் ஆகிவிட்டன. அரசு அலுவலகங்கள் மற்றும் ஆவணங்களில் ஜெயலலிதாவின் படங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. இந்தப் படங்களை அகற்ற வேண்டும் என்று கடந்த 7ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து மற்ற கட்சிகளின் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால், அதற்குப் பிறகும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை அகற்றவில்லை.

தமிழக சட்டப்பேரவை இணையதளத்தில் திருவரங்கம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயலலிதா என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இணையதளத்தின் இல்லப் பக்கத்திலேயே ஜெயலலிதாவின் தனிப்படமும், சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்கும் படமும் பெரிய அளவில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும், முதலமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது மாநிலத்தின் கடைக்கோடி குடிமகனுக்கும் தெரிந்திருக்கிறது; சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நகல் அனைத்து இணையதளங்களில் தாராளமாக கிடைக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தீர்ப்பு நகல் இன்னும் கிடைக்கவில்லை என்று சட்டமன்றச் செயலர் காரணம் கூறிக்கொண்டிருக்கிறார். இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் செயல் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

ஒரு மாநிலத்தின் ஆட்சியை நடத்தும் முதலமைச்சர், மக்கள் பிரதிநிதிகளுக்கெல்லாம் தலைவராக விளங்கும் சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோர் மக்களின் மன உணர்வையும், நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்க வேண்டும். தங்களின் போலி விசுவாசத்தைக் காட்டுவதற்காக ஊழல் குற்றவாளியின் படத்தை அரசு அலுவலகங்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் மட்டுமின்றி மாணவர்கள் பயன்படுத்தும் கையேடு, நோட்டுப்புத்தகங்கள் ஆகியவற்றிலும் இடம் பெறச் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.

முதலமைச்சரும், சட்டப்பேரவைத் தலைவரும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் என்பதைத் தாண்டி முதன்மையான மக்கள் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டுப்புத்தகங்கள் மற்றும் கையேடுகளில் ஜெயலலிதா படத்தை மறைக்கவும், அரசு அலுவலகங்கள் மற்றும் இணையதளங்களில் அவரின் படத்தை அகற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x