Published : 25 Jun 2016 08:33 AM
Last Updated : 25 Jun 2016 08:33 AM

விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு பொறியியல் கலந்தாய்வு: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் அண்ணா பல்கலை.யில் திடீர் போராட்டம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் விளை யாட்டுப் பிரிவினருக்காக நடந்த கலந்தாய்வின்போது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும் பெற்றோரும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொறியியல் படிப்பில் விளையாட்டுப் பிரிவினருக்கு 500 இடங்கள் உள்ளன. இதற்கு 11,186 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர் களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. அப்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அமைப்புகள் வழங்கிய விளையாட்டு தகுதி சான்றிதழ்கள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று கலந்தாய்வு தொடங்கியது.

தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற செஸ் வீராங்கனை வி.வர்ஷினி கிண்டி பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பாடப்பிரிவையும், கோகோ வீரர் நவீன் பிரபு, அதே கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவையும் தேர்வு செய்தனர். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் வழங்கினார். அப்போது தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி, அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் இந்துமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கலந்தாய்வு தொடர்ந்து நடந்துகொண்டிருந்த நிலையில், பொறியியல் விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்காமல் தபால் மூலம் அனுப்பிய காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், அதேபோல், விளையாட்டு தகுதிச் சான்றிதழ் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும் கலந்தாய்வு மையம் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மாணவர்களுடன் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரில் வந்துதான் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவரம் தெரியாமல் ஒரு சில கிராமப்புற மாணவர்கள் தபால் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பிவிட்டனர். இதனால் அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த மாணவர்களுக்கு திங்கள்கிழமை தொடங்கும் பொது கலந்தாய்வில் வாய்ப்பு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பதிவாளர் உறுதி அளித்த பின்னரே, அந்த மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தை கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x