Published : 03 Dec 2015 04:14 PM
Last Updated : 03 Dec 2015 04:14 PM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள், தேர்தல் நேரத்தில் தெளிவான பதிலை சொல்வார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் பெய்த மழையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்து பலர் முகாம்களிலும், சாலைகளிலும் நிர்க்கதியாக நிற்கிறார்கள். குழந்தைகளுக்கு பால் பாக்கெட் வாங்கவும், உணவு பொட்டலங்களை பெறவும், பொதுமக்கள் முட்டி மோதிக்கொள்வதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.
இதற்கு சரியான முன் ஏற்பாடுகள் எதுவும் இல்லாததே காரணமாகும். இந்த அரசு அமைய நானும் காரணமாக இருந்துள்ளேன் என்பதை நினைத்து வேதனைப்படுகின்றேன். நிருபர்கள் கேட்கிற கேள்விக்கே பதில் சொல்லாமல் சொல்லும் அதிகார வர்க்கத்தினர், தமிழக மக்களுக்கு எப்படி பதில் சொல்ல போகிறார்கள். இதற்கெல்லாம் தமிழக மக்கள் தேர்தல் நேரத்தில் மக்கள் தெளிவான பதிலை சொல்வார்கள்.
இந்நாள், முன்னாள் முதலமைச்சர்கள் வசிக்கின்ற போயஸ்கார்டன், கோபாலபுரம் பகுதிகளில் மழைநீர் தேங்கியதாக தெரியவில்லை. அதுபோல அதிமுக, திமுக இரண்டு ஆட்சியிலும் சென்னை முழுவதும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
தற்போதைய பாதிப்பை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க வேண்டும். இதற்காக வழங்குகிற ஆயிரக்கணக்கான கோடிகளை, முறைகேடுகள், லஞ்சம் மற்றும் ஊழலின்றி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT