Published : 08 Jul 2016 01:18 PM
Last Updated : 08 Jul 2016 01:18 PM

அரசாணையை மதிக்காத திரையரங்குகள் மீது நடவடிக்கை வருமா?- அதிக கட்டணத்தால் கதறும் ஈரோடு ரசிகர்கள்

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் ஈரோடு திரையரங்குகளில் அதிக கட்டண வசூல், தொடர்கிறது.

கடந்த காலங்களில் திரையரங்க வாயிலில் ரசிகர்கள் வரிசையில் நின்று டிக்கெட் பெறுவதற்கு என கம்பிகள் கொண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு, அதில், ஒவ் வொரு வரிசைக்கும் டிக்கெட் விலை குறிப்பிடப்பட்டு இருக்கும். எந்த டிக்கெட்டில் படம் பார்க்க வேண்டும் என்பதை ரசிகர்கள் முடிவு செய்து, அந்த வரிசையில் நின்று படம் பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது ஈரோடு நகரில் எந்த திரையரங்கிலும் கட்டணத்திற்கு ஏற்ற வரிசையோ, கட்டண விபரமோ காணப்படுவதில்லை.

விபரப்பலகை இல்லை

டிக்கெட் கொடுக்குமிடத்தில் சென்று ‘டிக்கெட் எவ்வளவு’ என்று கேட்டால், அவர்கள் என்ன தொகை சொல்கிறார்களோ அதனை கட்டணமாக கொடுத்து திரைப்படம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. சாதாரண நாட்களில் குறைந்தபட்சம் ரூ.50 எனத் தொடங்கி அதிக பட்சம் ரூ.150 என்றும், பிரபல நடிகர்களின் படங்கள் வெளியீட்டின் போது, குறைந்தபட்சம் ரூ.100 எனத்தொடங்கி ரூ.300 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. எந்த திரையரங்கிலும் டிக்கெட் விலை குறித்த விபர பலகை வைக்கப்படுவதில்லை; டிக்கெட்டிலும் எவ்வளவு தொகை என்று அச்சிடப்படுவதில்லை.

உயர் நீதிமன்றத்தின் கேள்வி

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக் கப்படுவது தொடர்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, ‘ஒருவர் புகார் அனுப்பினால்தான் சம்பந்தப் பட்ட திரையரங்கம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ஏன் அதிகாரிகளே நேரில் சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், ‘தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் கூடுதல்கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதைக் கண் காணிக்கவும், அந்த திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழுக்களை 3 வாரத்துக்குள் தமிழக அரசு உருவாக்கவேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால் அது குறித்து புகார் செய்ய வேண்டிய எண்ணினை திரை யரங்குகளில் பார்வையில் படும்படி எழுதி வைக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் இதுபோன்ற சிறப்புக்குழு அமைக்கப்படவில்லை.

சென்னையை விட அதிகம்

இதுகுறித்து சினிமா ரசிகர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘அதிக டிக்கெட் மற்றும் பார்க்கிங் கட்டணம், திரையரங்கில் 100 மடங்கு விலை உயர்த்தி விற்கப்படும் உணவுப் பண்டங்கள், இணையத்தில் முன்பதி செய்யும் டிக்கெட்டுக்கு கூடுதலாக ரூ.30 கட்டணம் என திரையரங்குகள் விதிமுறைகளை மதிக்காமல் கொள்ளை யடிக்கின்றன. குறைந்த பட்ச கட்டணமாக ரூ.10-க்கு சில இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்ற விதியை எந்த திரையரங்கும் பின்பற்றுவதில்லை. சினிமா என்பது பணம் படைத்தவர்களுக்குத்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிக கட்டண வசூலால் திரையரங்கிற்கு வராமல் ரசிகர்கள் திருட்டு விசிடியை தேடி செல்கின்றனர்’ என்றார்.

ஆட்சியர் உறுதி

இது தொடர்பாக ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் பேசியபோது, ‘திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், அனைத்து திரையரங்குகளிலும் கட்டண விபரம் மற்றும் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் ஆகிய விபர பலகை அனைவரின் பார்வைக்கும் தெரியுமாறு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அரசு நிர்ணயித்த கட்டண விபரம்

திரையரங்க கட்டணங்களை நிர்ணயம் செய்து கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில் (எண்:405 - உள்துறை (சினிமா) - 20 மே 2009) குறிப்பிடப்பட்டுள்ள கட்டண விபரம்:

மாநகராட்சிகள்

ஏ.சி. திரையரங்குகள் - 10 - 50

ஏ.சி. வசதி இல்லாதவை- 7 - 30

நகராட்சிகள்

ஏசி திரையரங்குகள் - 5 - 40

ஏசி வசதி இல்லாதவை - 4- 30

பேரூராட்சிகள்

ஏ.சி.திரையரங்குகள் - 5- 25

ஏ.சி. இல்லாதவை - 4 - 20

ஊராட்சிகள்

ஏ.சி. திரையரங்குகள் - 5 - 15

ஏ.சி. வசதி இல்லாதவை - 4 - 10

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை பொறுத்தவரை 15 வகையான வசதிகளை கொண்டதாக இருப்பின், அதிகபட்சமாக ரூ 120 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கலாம் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x