Published : 06 Mar 2014 11:59 AM
Last Updated : 06 Mar 2014 11:59 AM

தமிழக மீனவர்கள் 24 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வந்ததாகக்கூறி தொண்டியை சார்ந்த 15 நாட்டுப்படகு மீனவர்களையும், ராமஸ்வரத்தை சார்ந்த 9 விசைப்படகு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

தமிழக -இலங்கை இருநாட்டு மீனவர்களின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் மார்ச் 13 அன்று நடைபெற உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 24 பேரை இலங்கை சிறைபிடித்த சம்பவம் தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் நம்புதாளையில் இருந்து நாட்டுப்படகுகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், ராமேஸ்வரத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட மீனவர்களும் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். நள்ளிரவில் மீனவர்கள் பாக் ஜலசந்தி நீரிணைப்பில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறிய ரக ரோந்து கப்பல்களில் ரோந்து வந்தனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வந்ததாகக்கூறி தொண்டியை சார்ந்த 15 நாட்டுப்படகு மீனவர்களையும், ராமஸ்வரத்தை சார்ந்த 9 விசைப்படகு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். மீனவர்களுக்குச் சொந்தமான 3 நாட்டுப்படகு மற்றும் 2 விசைப்படகுகளையும் கைப்பற்றினர்.

சிறைப்பிடிக்கப்பட்ட 24 தமிழக மீனவர்களும் தலைமன்னார் காவல்நிலையத்தில் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்படுவர்.

இதுகுறித்து நமது செய்தியாளரிடம் பேசிய மீனவப் பிரதிநிதி கருணாமூர்த்தி, கடந்த ஜனவரி 27 அன்று சென்னையில் நடைபெற்ற இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இலங்கை கடற்படையினரால் 177 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் எதிர்வரும் மார்ச் 13 அன்று நடைபெற உள்ள இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தையை சீர்க்குலைக்கும் முயற்சியாக இது உள்ளது.

மார்ச் 13 அன்று கொழும்பில் நடைபெற உள்ள மீனவப் பேச்சு வார்த்தைக்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் கைப்பற்றப்பட்ட படகுகளுடன் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x