Last Updated : 01 Aug, 2016 08:19 AM

 

Published : 01 Aug 2016 08:19 AM
Last Updated : 01 Aug 2016 08:19 AM

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேலைக்கு அனுமதி; வேட்டிக்கு தடை: முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடக்கம்- மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடந்தது. 6 நாட்கள் நடந்த கலந்தாய்வில், தமிழக அரசு ஏற்று நடத்தும் கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி உட்பட 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில அரசுக்கான 2,318 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டன. மேலும், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கான 65 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பிடிஎஸ் இடங்களில் 78 இடங்களும் நிரப்பப்பட்டன. மேலும் 6 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில அரசுக்கான 470 எம்பிபிஎஸ் இடங்களில் 402 இடங்கள் நிரம்பின.

7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான 72 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 7 பிடிஎஸ் இடங்கள், 17 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான 970 பிடிஎஸ் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திருப்பி அளிக்கப்படும் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை ஆணை பெற்ற மாணவ, மாணவிகள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரியில் அனுமதி கடிதத்தை கொடுத்து சேர்ந்துவிட்டனர். இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று (ஆகஸ்ட்-1) தொடங்குகிறது.

மருத்துவக் கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகளை மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) அறிவித்துள்ளது. இதுபற்றி டிஎம்இ அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மருத்துவக் கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், டி-சர்ட், லெகிங்ஸ், ஸ்லீவ்லெஸ் போன்ற ஆடைகளை அணிந்து வரக்கூடாது. மாணவிகள் தலைமுடியை விரித்துவிடாமல் இறுக்கமாக கட்டிக்கொண்டு வரவேண்டும். மாணவர்கள் பேன்ட், சட்டை அணிந்து இன் செய்துகொண்டும், ஷூ அணிந்தும் வரவேண்டும். மாணவிகள் சேலை அணிந்து வரலாம். மாணவர்கள் வேட்டி அணிந்து வரக்கூடாது. வகுப்பறை யில் செல்போன் உபயோகப் படுத்தக் கூடாது. மாணவ, மாணவி களின் ஆடை கட்டுப்பாட்டை கண்காணிக்கும்படி அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வ ருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மாணவிகள் தலைமுடியை விரித்துவிடாமல் இறுக்கமாக கட்டிக்கொண்டு வரவேண்டும். மாணவர்கள் பேன்ட், சட்டை அணிந்து இன் செய்துகொண்டும், ஷூ அணிந்தும் வரவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x