Published : 23 Feb 2017 05:46 PM
Last Updated : 23 Feb 2017 05:46 PM

ராமேசுவரம் அருகே கரை ஒதுங்கிய அரியவகை 125 வயது தோணி ஆமை

உலகின் மிக அரியவகை ஆமைகளில் ஒன்றான 125 வயதுள்ள தோணி ஆமை ஒன்று ராமேசுவரம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய இந்தியக் கடற்பகுதிகளில் பங்குனி ஆமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, ஓங்கில் ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய ஐந்து வகை ஆமைகள் காணப்படுகின்றன.

உலகிலேயே அதிக வருடம் உயிர் வாழக்கூடிய உயிரினமும் தோணி ஆமைகள் கடல் ஆமைகளிலேயே மிகப் பெரியதும், அதிக எடை கொண்டதும் ஆகும். அதிகப்பட்சமாக 800 கிலோ எடையும் ஒன்பது அடி நீளம் வரையிலும் வளரக்கூடியது. இந்த வகை ஆமைகள் அழகு சாதனப் பொருட்களுக்காகவும், மாமிசத்துக்காகவும் அதிகளவில் வேட்டையாடப்படுவதால் மிக வேகமாக அழிந்து வரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமேசுவரம் அருகே புதுமடம் கிராமத்தில் 125 வயதுடைய அரியவகை ஆமையான தோணி ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இதனை ஆய்வு செய்த மண்டபம் வனச்சரகர் சதிஷ் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''உலகின் மிகப் பெரிய கடலாமையான தோணி ஆமை உலகில் அதிக வயது வரையிலும் வாழக்கூடிய உயிரினமும் ஆகும். பெண் தோணி ஆமைகள் முட்டையிடுவதற்காக 6000 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் நீந்தக் கூடியது. சுமார் 500 முதல் 1,000 மீட்டர் கடலின் ஆழம் வரையிலும் 30 நிமிடம் வரையிலும் மூச்சு பிடித்து நீந்தும் திறன்கொண்டவை.

கணவாய் மீன், ஜெல்லி மீன் ஆகியவனை இதற்கு விருப்பமான உணவாகும். கடலில் குப்பையாக கொட்டப்படும் பிளாஸ்டிக் பைகளை கணவாய், ஜெல்லி மீன்கள் என நினைத்து தோணி ஆமைகள் சாப்பிட்டு விடுவதுண்டு இதனால் இவை வேகமாகவும் அழிந்து வருகிறது.

கரை ஒதுங்கிய தோணி ஆமையின் நீளம் 1.50 மீட்டர்; அகலம் 1.35மீட்டர், சுற்றளவு 2.68 மீட்டர் கொண்ட இதன் எடை 250 கிலோ. இதனுடைய வயது 125. பாறையில் அடிபட்டு இறந்திருக்கலாம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x