Published : 27 Oct 2013 03:53 PM
Last Updated : 27 Oct 2013 03:53 PM

2ஜி வழக்கு: தயாளு அம்மாளிடம் விசாரணை

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்தப்படுகிறது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ரூ.200 கோடி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரர் என்ற முறையில் தயாளு அம்மாளை விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்தது. இதற்காக தயாளு அம்மாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. உடல் நிலை காரணமாக அவரால் நேரில் வரமுடியாது என நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் தயாளு உடல்நிலையை பரிசோதித்த எய்ம்ஸ் டாக்டர்கள் குழு, அறிக்கை அளித்தது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், சென்னையில் உள்ள வீட்டிலேயே அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.கோபாலன் தலைமையிலான நீதிபதிகள் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தயாளு அம்மாள் வீட்டில் திங்கள்கிழமை விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x