Published : 09 Apr 2017 07:03 AM
Last Updated : 09 Apr 2017 07:03 AM

மே 1-ம் தேதி சென்னையில் விழா: தமிழ் தேசிய சலனப் பட நூற்றாண்டு நிறைவு - 100 தொழிலாளர்களுக்கு 100 பவுன் தங்கப்பதக்கம்

தமிழ்த் தேசிய சலனப் பட நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு திரைப்படத்துறை மற்றும் திரைப்படத்துறை சாராமல் திரைத்துறை வளர்ச்சிக்கு பங்களித்த 100 தொழிலாளர்களுக்கு 100 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.

மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியை உலகாயுதா பவுண்டேஷன் நிறுவனரும், திரைப்பட இயக்குநருமான எஸ்.பி.

ஜனநாதன் ஒருங்கிணைக்கிறார். இந்த நிகழ்வில் மூத்த கலைஞர்களுக்கு வழங்கவுள்ள 100 பவுன் தங்கப் பதக்கத்துக்கான செலவை நடிகர் விஜய்சேதுபதி ஏற்றுள்ளார். இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இருவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கூறியதாவது :

‘கீசக வதம்’ என்கிற முழு நீள சலனப்படம் (மோஷன் பிக்சர்) 1916-ம் ஆண்டில் வெளியானது. இதை ஆர்.நடராஜ முதலியார் என்பவர் தயாரித்து இயக்கினார். அவர் ஒரு தமிழர். ஒரு தமிழர் எடுத்த சினிமா நூற்றாண்டைக் கண்டிருக்கிறது. இப்படிப்பட்ட பெருமையை ஏற்படுத்தித்தந்த தென்னிந்திய பால்கே ஆர்.நடராஜ முதலியாரை பெருமைப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். இதை முன்வைத்து திரைப்பட துறை யின் ஒவ்வொரு பிரிவிலிருந்து மூன்று மூத்த கலைஞர்களைத் தேர்வு செய்து, மொத்தம் 100 கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம் பரிசளிக்க உள்ளோம்.

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், சினிமாட்டோகிராஃபர்ஸ் அசோசியேஷன், தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர்கள் அசோசியேஷன், திரைப்பட எழுத்தாளர் கள் அசோசியேஷன், திரைப்பட - டிவி ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிகை அலங்கார சங்கம், தென்னிந்திய திரைப்பட நளபாக ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்பட அமைப்புகள் மற்றும் திரைப்படத் துறை சாராமல் அதன் வளர்ச்சிக்கு பங்களித்தவர்களுக்கும் இந்த பரிசு வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு அமைப்பைச் சேர்ந்த மூத்த கலைஞர்களை அந்தந்த அமைப்பையே தேர்வு செய்து அளிக்கும்படி தெரிவிக்க உள்ளோம். மே 1-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னோடிகள் இந்த பதக்கங்களை வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ள 100 பவுன் தங்கத்தின் செலவை நடிகர் விஜய்சேதுபதி ஏற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இவ்வாறு எஸ்.பி.ஜனநாதன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x