Last Updated : 13 Mar, 2014 09:20 AM

 

Published : 13 Mar 2014 09:20 AM
Last Updated : 13 Mar 2014 09:20 AM

3 மகன்களுக்கு சிறுநீரகக் கோளாறு: வறுமையுடன் போராடும் தந்தை- 2 பேருக்கு சிறுநீரகம் கிடைத்தது; ஒரு மகனுக்கு கிடைக்கவில்லை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மகன்களின் சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதில் இருவருக்கு மாற்று சிறுநீரகம் கிடைத்துள்ள நிலையில் ஒருவர் மட்டும் மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருக்கிறார். மகன்களை காப்பாற்ற அவர்களின் தந்தை வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.

வேலூர் மாவட்டம் அகரம் சேரி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் மஜித் (45). அப்பகுதியில் தள்ளு வண்டியில் சென்று காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி ரெஹானா பேகம் (40). இவர்களுக்கு அஸ்லாம் பாஷா (25), அன்சர் (21), முகமது யாசின் (19) ஆகிய மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு அப்துல் மஜித்தின் இரண்டாவது மகன் அன்சாருக்கு திடீரென்று சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதையடுத்து, மகனை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார்.

மகனுக்காக தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை அப்துல் மஜித் கொடுக்க முடிவு செய்தார். அறுவைச் சிகிச்சைக்கான நாட்கள் நெருங்கிய நிலையில் ஊரில் இருந்த 2 மகன்களின் உடல்நிலை மோசமானது. இதனை தொடர்ந்து, அவர்களும் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அடிமேல் அடி

டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில், அவர்கள் இருவருடைய சிறுநீரகங்களும் செயலிழந்திருப்பது தெரியவந்தது. அப்துல் மஜித் தானம் கொடுத்த சிறுநீரகம் அன்சாருக்கு பொருத்தப்பட்ட நிலையில் மற்ற 2 மகன்களுக்கும் சிறுநீரகம் வேண்டி பதிவு செய்யப்பட்டது. சிறுநீரகம் கிடைக்கும் வரை டயலிசிஸ் செய்யும்படி டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் மூலம் தானமாக கிடைத்த சிறுநீரகம் அவரது முதல் மகன் அஸ்லாம் பாஷாவிற்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொருத்தப்பட்டது. ஆனால், இதுவரை கடைசி மகன் முகமது யாசினுக்கு சிறுநீரகம் கிடைக்கவில்லை. அவருக்கு தொடர்ந்து டயலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக அப்துல் மஜித் கூறியதாவது:

மூன்றாவது மகனுக்கு மந்தைவெளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து டயலிசிஸ் செய்து வருகிறோம். அவருக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும், இதயம் பலவீனமாக இருப்பதாகவும் டாக்டர்கள் சொல்கின்றனர்.

அதனால், அவனுக்கு சிறுநீரகம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவனுக்கு வாரத்திற்கு 2 முறை டயலிசிஸ் செய்து வருகிறேன். ஒரு முறை டயலிசிஸ் செய்ய சுமார் ரூ.2,500 செலவாகிறது. நான் ஒரு இறைச்சி கடையில் வேலை செய்கிறேன். தற்போது, செம்மஞ்சேரியில் உள்ள சுனாமி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசிக்கிறோம்.

கண்ணில் புரை

இரண்டாவது மகன் அன்சார் அறுவைச் சிகிச்சைக்கு பிறகு ஒரு துணி கடையில் வேலை பார்த்து வந்தான். அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டதால், கண்ணில் புரை ஏற்பட்டுவிட்டது. இன்றுதான் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவனுக்கு கன்புரை அறுவைச் சிகிசை செய்யப்பட்டது.

எங்களுடைய நிலைமையை புரிந்து கொண்ட, அந்த மருத்துவமனை அறுவைச் சிகிச்சைக்கு எங்களிடம் பணம் வாங்கவில்லை. மருந்து, மாத்திரைக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் என்று சொல்லி விட்டனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x