Published : 06 Apr 2017 11:50 AM
Last Updated : 06 Apr 2017 11:50 AM

வாசனுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: தேர்தலுக்கு ஆதரவு கோரியதாக தகவல்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமாகா கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை திடீரென இன்று (வியாழக்கிழமை) சந்தித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலிலாதவின் மறைவை அடுத்து ஆர்.கே நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைதேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மருது கணேஷ் (திமுக), இ.மதுசூதனன் (அதிமுக புரட்சித் தலைவி அம்மா), டிடிவி தினகரன் (அதிமுக அம்மா), கங்கை அமரன் (பாஜக), ஜெ.தீபா (எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை), ஆர்.லோகநாதன் (மார்க்சிஸ்ட்), மதிவாணன் (தேமுதிக) ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வேட்பாளர்களாக உள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுப் பிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளிடம் ஆதரவுகளையும் கோரி வருகின்றன.

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை இன்று (வியாழக்கிழமை) காலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தேர்தலில், மதுசூதனனை ஆதரிக்க வேண்டி இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வத்தின் கட்சி சார்பாக போட்டியிடும் மசூதனனுக்கு தன்னுடைய ஆதரவை ஜி.கே.வாசன் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த சட்டப் பேரவை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. சட்டப் பேரவை தேர்தலில் எதிர்பார்த்த முடிவு கிடைக்ககாதலால் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து தமாகா விலங்கி தனித்து செயல்பட்டு வருகிறது.

ஆர்.கே, நகர் தேர்தலில் தமாகா யாருக்கு தன்னுடைய ஆதரவை அளிக்கும் என்ற எதிர்பார்த்திருந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x