Published : 10 Aug 2016 08:20 AM
Last Updated : 10 Aug 2016 08:20 AM
சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிடப்படும் அறிக்கை குறித்து யாரும் கேள்வியோ, விளக்கமோ கேட்க முடியாது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் அறிக்கை அளித்த முதல்வர், மின் துறையில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.4,126 கோடிக்கான புதிய திட்டங்களை அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், மின் துறை அமைச்சர் பி.தங்கமணி. சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் ஆகியோர் முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து பேசினர்.
அப்போது குறுக்கிட்ட திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி), முதல்வர் அளித்த அறிக்கை குறித்து சில கேள்விகள் கேட்க அனுமதி கேட்டார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார். ஆனாலும், அன்பழகன் தொடர்ந்து அனுமதி கேட்டவாறு இருந்தார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, ‘‘திமுக உறுப்பினருக்கு இந்த அவையின் விதிகளை பற்றி விளக்கிச் சொல்வது நல்லது என கருதுகிறேன், 110-வது விதியின் கீழ் வெளியிடப்படும் அறிக்கை குறித்து எந்த வினாவும் எழுப்ப முடியாது. விளக்கமும் கேட்க முடியாது. அதைப்பற்றி வேறு விதமான கருத்தும் தெரிவிக்க முடியாது. வேண்டுமானால் நன்றி தெரிவிக்கலாம். இதை அவருக்கு புரிய வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT