Published : 17 Nov 2013 01:46 PM
Last Updated : 17 Nov 2013 01:46 PM

வறட்சி மாநிலமாக மாறுகிறதா தமிழகம்? - மத்திய அரசு அமைப்பு அதிர்ச்சி தகவல்

பருவ நிலை மாற்றத்தால் வறட்சி மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலை மத்திய மானாவாரி வேளாண்மை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் முக்கிய பிரச்சினையாக கருதப்படும் பருவ நிலை மாற்றம், பல நாடுகளிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதன் தாக்கம் தமிழகம், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வறட்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 7 மாவட்டங்கள் ஈர மண்டலத்தில் இருந்து வறட்சி மண்டலமாக மாறி வருகின்றன என்கிறது மத்திய அரசின் அமைப்பான மத்திய மானாவாரி வேளாண்மை ஆய்வு மையம். இந்த மையத்தின் ஆய்வு முடிவுகள், கடந்த ஆகஸ்டில் ‘கரண்ட் சைன்ஸ்’ என்ற பிரபல அறிவியல் இதழில் வெளியிடப்பட்டன.

1973-ல் ‘வறட்சி அபாயப் பகுதித் திட்டம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியபோது நாட்டின் வறட்சிப் பகுதிகள் வகைப்படுத்தப்பட்டன. அதன்பிறகு 1988-ம் ஆண்டில் பருவ நிலை மாற்றத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஓர் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது முதன்முறையாக மாவட்ட அளவில் பருவநிலை மாற்றம் எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றி ஆராயப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள 144 மழைப்பதிவு நிலையங்களில் இருந்து 1971 முதல் 2005 வரை பதிவான மழை அளவுகளைக் கொண்டு ஆய்வு செய்தபோது, கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் பல பகுதிகள் மெல்ல மெல்ல அரை வறட்சி மண்டலமாக மாறி வந்திருக்கின்றன என்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளை 1988-ம் ஆண்டின் ஆய்வு முடிவுகளோடு ஒப்பிட்டு பார்த்தபோது நாட்டில் சுமார் 27 சதவீதம் வறட்சிப் பகுதிகள் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தின் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் ஈரப்பதம் குறைந்து அம்மாவட்டங்கள் அரை வறட்சிப் பகுதியாக மாறிவருகின்றன என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இதுகுறித்து மத்திய மானாவாரி வேளாண்மை ஆய்வு மைய இயக்குனர் வெங்கடேஸ்வரலுவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘தமிழகத்தில் அரை வறட்சிப் பகுதிகள் அதிகரித்தாலும் நாடு முழுக்க உள்ள வறட்சி மண்டலங்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. எனினும், தமிழகத்தில் வறட்சிப் பகுதிகள் அதிகரித்து வருவது கவனத்தில் கொள்ளத்தக்கது’’ என்றார்.

பருவ மழையால் இத்தகைய வறட்சிப் பகுதிகளுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமா என்று கேட்டதற்கு, ‘‘ஒன்று அல்லது இரண்டு ஆண்டுங்களில் இந்தப் பகுதிகளில் அதிகமாகப் பெய்த பருவ மழையைக் கணக்கில் கொண்டு நன்மை தருமா என்பதைச் சொல்லிவிட முடியாது. நீண்ட கால மழை அளவுகளை வைத்தே ஒரு முடிவுக்கு வர முடியும்’’ என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x