Published : 09 Mar 2014 12:00 AM
Last Updated : 09 Mar 2014 12:00 AM

சாலையோரம் வீசப்பட்ட ஆதார் அட்டைகள்: அரூர் அருகே பரபரப்பு

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சாலையோரம் ஆதார் அட்டைகள் வீசப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அரூர் வட்டம் அரூர்-ஊத்தங்கரை சாலையில் உள்ளது மோப்பிரிப்பட்டி ஊராட்சி. இங்கு ஒரு பெட்ரோல் நிலையம் அருகில் சாலையோரம் கிடந்த குப்பைகளில் ஆதார் அட்டைகள் சிதறிக் கிடந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள், வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அரூர் வட்டாட்சியர் தர்மராஜன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உடனடியாக அங்கு வந்து, சாலையோரம் கிடந்த ஆதார் அட்டைகளைக் கைப்பற்றி ஆய்வு செய் தனர். அந்த அட்டைகள் அனைத்தும் மோப்பிரிப்பட்டி கிராமத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய ஆதார் அட்டைகள் என்பது தெரியவந்தது. அஞ்சல் ஊழியரின் அலட்சியத்தால் ஆதார் அட்டைகள் குப்பைக்கு வந்ததாகத் தெரிகிறது.

இது தொடர்பாக தருமபுரி மாவட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சாலையோரம் கிடந்த 239 கார்டுகளும் அஞ்சல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றை உரியவர்களிடம் பாதுகாப்பான முறையில் சேர்ப்பிக்கும்படி வருவாய்த் துறையினர், அஞ்சல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர். மிக முக்கிய ஆவணமாகக் கருதப்படும் ஆதார் அடையாள அட்டைகள் மிகுந்த அலட்சியமாக சாலையோரம் வீசப்பட்டுக் கிடந்த சம்பவம் நேற்று அரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x