Published : 18 Mar 2017 09:24 AM
Last Updated : 18 Mar 2017 09:24 AM
தமிழ்நாடு மின்வாரியத்தால் அமைக்கப்படும் உப்பூர் அனல் மின் நிலையம், சோலையார் நீர் மின் நிலையத்தை தரம் உயர்த்தும் பணி மற்றும் வடசென்னை துணை மின் நிலையப் பணிகள் ஆகியவற்றுக்கு ரூ.9,128 கோடி கடன் உதவி வழங்க பவர் பைனான்ஸ் நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் தமிழ்நாடு மின்வாரிய மற்றும் பவர் பைனான்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. மேலும், ரூ.3,125 கோடி மதிப்பீட்டிலான மின்கம்பிகளை புதைவட மின்கம்பிகளாக மாற்றும் திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், ஏற்கெனவே பணிகள் நடைபெற்று வரும் எண்ணூர் அனல் மின் திட்டத்துக்கு ரூ.114 கோடிக்கான காசோலையினை, திட்ட ஒப்பந்ததாரரான எஸ்இஇசட் நிறுவன அலுவலர்களிடமும், குறுகிய கால உதவியாக ரூ.500 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு மின்பகிர்மான கழக அலுவலர்களிடமும் பவர் பைனான்ஸ் நிறுவன அலுவலர்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எம். சாய்குமார், பவர் பைனான்ஸ் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் சர்மா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மற்றும் பவர் பைனான்ஸ் நிறுவன இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT