Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM

கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு ஒருவர் சாவு; 29 பேர் காயம்

சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில், காளை முட்டியதில் வேடிக்கை பார்க்க வந்த ஒருவர் உயிரிழந்தார். 29 பேர் காயமடைந்தனர்.

இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் முன்னிலை வகித்தார். மஞ்சுவிரட்டில் கலந்துகொள்ள 105 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. ஆனால், 41 காளைகள் மட்டுமே தொழுவத்துக்கு வந்தன. இதில் 39 காளைகள் மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டன. 25 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

இந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சியைப் பார்க்க தேவகோட்டை அருகே உறுதிக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் (46) என்பவர் வந்திருந்தார். அவர் காளை முட்டியதில் படுகாயமடைந்து மதுரைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் 29 பேர் காயமடைந்தனர்.

இதில் காயமடைந்த அனைவரும் பார்வையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் பங்கேற்ற வீரர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை பார்ப்பதற்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். 500-க்கும் மேற்பட்ட போலீஸார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x