Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM

நாகை மீனவர்கள் 225 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

நாகப்பட்டினம் மீனவர்கள் 225 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. வங்கக் கடலில் இருக்கும் அந்தமான் சிறையில்தான் சுதந்திரத்துக்கு போராடிய தீரர்களை சிறை வைத்தது பிரிட்டிஷ் அரசு. ஆனால் தற்போது வங்கக் கடலையே திறந்தவெளி சிறையாக மாற்றியிருக்கிறது இலங்கை கடற்படை.

80 நாட்களைக் கடந்தும், 4 முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டும் இதுவரை விடுவிக்கப்படாத காரைக்கால் மீனவர்கள் 32 பேரையும், அவர்களது 4 படகுகளையும் மீட்க இதுவரை பெரிய முயற்சிகள் எதையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்காத நிலையில் தற்போது அடுத்த கட்டமாக 225 மீனவர்களை சிறைப்பிடித்திருக்கிறது இலங்கை கடற்படை.

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண் டிருந்த நாகப்பட்டினம், அக்கரைப் பேட்டை, கீச்சாங்குப்பம் பகுதி களைச் சேர்ந்த 32 விசைப்படகுகளை யும், அதில் இருந்த 225 மீனவர் களையும் புதன்கிழமை காலை ஒட்டுமொத்தமாக சுற்றி வளைத்து தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றிருக்கின்றனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 9-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற படகுகள் இவை. 2 நாட்கள் கடலில் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பலாம் என்று இருந்தவர்களை புதன்கிழமை காலை 10 மணிக்கெல்லாம் சுற்றி வளைத்தனர் 5-க்கும் மேற்பட்ட சிறு கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர்.

“அனைவரையும் கைது செய்கிறோம், மீறி ஏதாவது பேசினால் சுட்டுக் கொன்று விடுவோம்” என்று மிரட்டி அனைத்து படகுகளையும் திரிகோணமலை துறைமுகத்துக்கு இழுத்துச் செல்ல ஆரம்பித்தனர்.

அதற்குள் மீனவர்கள் நாகைக்கு தகவல் சொல்லவே, தமிழக மீன்வளத்துறை அமைச்சர், மத்திய அமைச்சர் நாராயணசாமி, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்து இலங்கை கடற்படையினரிடமிருந்து மீனவர்கள் அனைவரையும் மீட்டுத் தரும்படி கேட்டுக் கொண்டனர்.

வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக மொத்தமுள்ள 32 படகுகளில் 17 படகுகளையும் அதில் இருந்த 125 பேரையும் விடுவித்தனர். மீதமுள்ள 15 படகுகளையும் அதில் இருந்த 100 மீனவர்களையும் திரிகோண மலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் வியாழக் கிழமை காலை கரை திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்கள் ஒட்டுமொத்தமாகச் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் நாகப் பட்டினம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x