மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துப் பேசினார். இருவரும் 45 நிமிடம் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து காங்கிரஸ் தேமுதிக கூட்டணி ஏற்படுமா என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
அந்தக் கட்சியை கூட்டணியில் சேர்க்க திமுக, பா.ஜ.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திடீரென வந்தார். விஜயகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினார்.
பின்னர், திரைப்படத்தில் நடிக்கும் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்கு வாசன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து வாசனும் விஜயகாந்த்தும் சுமார் 45 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். தமிழக அரசியல் நிலவரம், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.
தேமுதிக தரப்பில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, இருவரது சந்திப்பையும் உறுதிப்படுத்தினர். அதேநேரம், ஜி.கே.வாசன் தரப்பில் தொடர்பு கொண்டபோது, புத்தாண்டு அன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பதாக கூறிவிட்டனர்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியது. அவருக்கு முதலில் காங்கிரஸ் ஆதரவு அளித்ததாக செய்திகள் வெளியாயின. ஆனால், கடைசி நேரத்தில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனாலும் காங்கிரஸ் தேமுதிக இடையே தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது.
தற்போது விஜயகாந்தை வாசன் திடீரென சந்தித்துப் பேசியிருப்பது, இரு கட்சிகளிடையே கூட்டணி அமையுமா என்ற பரபரப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.
WRITE A COMMENT