Published : 04 Feb 2017 12:08 PM
Last Updated : 04 Feb 2017 12:08 PM

ரூ. 40 கோடியில் 7 அடுக்கு மாடி கட்டிடம் தயார்: மதுரை அரசு மருத்துவமனையில் ஏப்ரலில் திறப்பு

மதுரை அரசு மருத்துவமனையில் ரூ. 40 கோடியில் கட்டப்பட்ட 7 அடுக்கு மாடி தாய், சேய் உயிர் காக்கும் உயர் சிகிச்சை கட்டிடம் திறப்பு விழா ஏப்ரல் மாதம் நடை பெற உள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய், சேய் சிகிச்சைப் பிரிவில் ஒரு நாளைக்கு 35 முதல் 50 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் 50 சதவீதம் பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறுகிறது. இந்த சிகிச்சைப் பிரிவு போதிய வசதிகளின்றி மிகுந்த நெருக்கடியுடன் பழைய கட்டிடத்தில் செயல்படுகிறது.

மகப்பேறு, சிசு மருத்துவச் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் இருந் தும் இடநெருக்கடியால் அவர்களுக்கான உயர் தர அறுவை சிகிச்சை அரங்குகள் இல்லாததால் முழுமையான சிகிச்சை வழங்க முடியவில்லை. குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு நோய்த் தொற்றும் ஏற்படுகிறது. அதனால், அவ்வப்போது தாய், சேய் மரணங்கள் நிகழ்கின்றன. இதனைத் தடுக்க, அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 2015-ம் ஆண்டு ரூ. 40 கோடியில் மருத் துவமனை வளாகத்தில் 7 அடுக்கு மாடிகளுடன் கூடிய தாய், சேய் உயிர் காக்கும் உயர் சிகிச்சை கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது இந்த கட்டிடப் பணி நிறைவடைந்து, ஏப் ரல் மாதம் திறக்கப்படவுள்ளது.

இதுகுறித்து டீன் எம்.ஆர். வைரமுத்து ராஜூ கூறிய தாவது: கடந்த காலத்தில் மருத்துவமனையில் ஒரே நாளில் நூறு பிரசவங்கள் வரை நடைபெற்றன. தற்போது ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கண்டிப்பாக பிரசவங்கள், அறுவை சிகிச்சைகள் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு, அதற்கான வசதிகளும் ஏற்படுத் தப்பட்டுள்ளன.

அதனால், ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வருவோர் எண் ணிக்கை முன்பை விட குறைந் துள்ளது. ஆனால், ஆரம்ப சுகா தார நிலையங்களில் இருந்து பரிந்துரைக்கப்படும் சிக்கலான பிரசவங்கள் இங்கு அதிகளவு நடக்கிறது. அதற்காக தற்போது சர்வதேச தரத்தில் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் இந்த புதிய கட்டிடத்தில் ஏற்படுத் தப்பட்டுள்ளன. அதனால், அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு தையல் பிரிந்து நீர்க்கட்டி ஏற்பட இனி வாய்ப்பே இல்லை. அந்தளவுக்கு இந்த சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு உயர்தர சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், தாய், சேய் மரணங்கள் குறையும் வாய்ப்புள்ளது. இந்த புதிய கட்டிடத்தை ஏப்ரல் மாதம் திறக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு தமிழக அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதி நவீன 350 படுக்கை வசதி

டீன் மேலும் கூறுகையில்,

கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பிற்காக இந்த புதிய கட்டிடத்தில் அதி நவீன 350 படுக்கை வசதிகளுடன் கூடிய அறைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போதுள்ள தாய், சேய் சிகிச்சைப்பிரிவு இந்த புதிய கட்டிடத்திற்கு வந்தபிறகு, பழைய கட்டிடத்தில் பேறுகாலம் தவிர்த்த கர்ப்பப்பை கட்டி, குழந்தைப் பேறு உள்ளிட்ட பிற சிகிச்சைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் பணியாற்ற கூடுதலாக 21 தலைமைச் செவிலியர்கள் நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நோயாளிகள், ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்குச் செல்ல லிப்ட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் லேபர் தியேட்டர் வசதியுடன், அவசர சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் நடைபெறும். மருத்துவர்கள், செவிலியர்கள் ஓய்வு அறைகள், பணி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் காத்திருப்பு இடம், நோயாளிகளுடன் உடன் இருப்பவர்கள் தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. காவலாளிகள், கார், இருசக்கர வாகன நிறுத்தும் வசதியும் இந்த கட்டிடத்துக்காக தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x