Published : 17 Feb 2014 03:26 PM
Last Updated : 17 Feb 2014 03:26 PM

மத்திய பட்ஜெட் ஓரளவு வரவேற்கத்தக்கதே: கருணாநிதி

எதிர்பார்த்த அளவிற்கு ஏராளமான சலுகைகள் இல்லாவிட்டாலும், மத்திய இடைக்கால பட்ஜெட் ஓரளவுக்கு வரவேற்கத்தக்கதே என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் "விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கின்ற நிலையில், மத்திய, மாநில அரசுகள் அதிக அளவுக்கு சலுகைகளையும், புதிய புதிய அறிவிப்புகளையும் நிதி நிலை அறிக்கையிலே வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த நிலையில் கடந்த வாரம் வெளிவந்த தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் ஒன்றுமே இல்லை என்ற நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கையில், சில அம்சங்கள் வரவேற்கத்தக்கவையாக உள்ளன.

குறிப்பாக நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்ற திமுக 10-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், கோதுமைக்கு உள்ள சலுகை, அரிசிக்கு ஏன் இல்லை? என்ற தலைப்பில் அரிசிக்கும், பருத்திக்கும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டுமென கேட்டிருந்தோம். இதுபற்றி ஏற்கனவே விரிவாக அறிக்கையும் கொடுத்திருந்தோம்.

தற்போது, மத்திய நிதி நிலை அறிக்கையில் அரிசிக்கான சேவை வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதுபோலவே கல்விக் கடன் பற்றியும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தோம். கல்விக் கடன் மீதான வட்டியில் தற்போது சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக 10 லட்சம் வேலைகள் ஒதுக்கப்படும், செல்போன் விலை குறையும், நாட்டில் நான்கு மிகப் பெரிய சூரிய ஒளி மின் திட்டங்கள், ஏழு புதிய விமான நிலையங்கள் போன்றவைகளுடன், பணவீக்கத்தை 5 சதவீத அளவுக்கு குறைத்திருப்பதும் நிதி நிலை அறிக்கையில் வரவேற்கத் தக்க அம்சங்கள்.

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்துவது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. எதிர்பார்த்த அளவிற்கு ஏராளமான சலுகைகள், மத்திய நிதி நிலை அறிக்கையில் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு வரவேற்கத்தக்க நிதி நிலை அறிக்கையாகவே உள்ளது" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x