Last Updated : 04 Jan, 2016 03:09 PM

 

Published : 04 Jan 2016 03:09 PM
Last Updated : 04 Jan 2016 03:09 PM

நாஞ்சில் சம்பத் சறுக்கல்: கட்சியின் குரல்களும் கேள்விகளும்!

தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு கட்சி செய்தித் தொடர்பாளரின் பொறுப்பு மிகவும் சவாலானது. அது முழுக்க முழுக்க கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டுக் கீழ் உள்ள பதவியாகும்.

நாஞ்சில் சம்பத் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டு தனியார் தொலைக்காட்சிகளில் அடுத்தடுத்து அவர் அளித்த பேட்டிகளே இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் எதிர்கொண்டுள்ள சவால் எவ்வளவு சிக்கலானது என்பதை நாம் சற்றே ஆழமாக அலசுவோம். ஒவ்வொரு கட்சியின் செய்தித்தொடர்பாளரும் கம்பியின் மீது நடந்து வித்தை காட்டும் நபரைப் போலவே ஆட்டுவிக்கப்படுகிறார் என்றால் அது மிகையாது.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு கட்சி செய்தித் தொடர்பாளரின் பொறுப்பு மிகவும் சவாலானது. அது முழுக்க முழுக்க கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டுக் கீழ் உள்ள பதவியாகும். அதேபோல், கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்படும் பதவியும் கூட. கட்சியின் மேடை பேச்சாளருக்கும், செய்தித் தொடர்பாளருக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.

கட்சி செய்தித்தொடர்பாளர் உதிர்க்கும் வார்த்தைகள் தலைமையின் மனதில் உள்ளவையாக இருக்க வேண்டும். அதே வேளையில் கட்சியின் கொள்கையை எடுத்துரைப்பதாகவும் இருக்க வேண்டும். ஒரு மெலிசான கோட்டின் மீது நிற்பது போன்றது. ஆனால், கட்சியின் மேடை பேச்சாளருக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை.

இத்தகைய மெலிசான கோட்டில் பயணித்தபோது, கட்சி தலைமையை பாதுகாக்க முயன்றபோது நாஞ்சில் சம்பத் சறுக்கியிருக்கிறார். வெள்ளத் துயரத்தில் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டம் தேவையா என்ற கேள்விக்கு 'ஒப்பாரி சத்தம் கேட்கிறது என்பதற்காக திருமணத்தை நிறுத்த முடியுமா' என்ற சர்ச்சை கேள்வியை கேட்டு சறுக்கியிருக்கிறார்.

1990-களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக ஞானதேசிகன் அக்கட்சியின் தலைவர் மூப்பனாரால் நியமிக்கப்படும் வரை தமிழக அரசியல் வட்டாரத்தில் செய்தித் தொடர்பாளர் என்றொரு பதவியும், சொல்லும் புதிதாகவே இருந்தது.

திராவிட அறிஞர் திருநாவுக்கரசு செய்தித் தொடர்பாளர் பதவி குறித்து கூறும்போது, "கட்சிக்காக செய்தித் தொடர்பாளரை நியமிக்கும் வழக்கம் டெல்லியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். தமிழக அரசியலில் இத்தகைய கலாச்சாரமே இல்லை. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டங்கள் மூலமாக மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தனர். இல்லாவிட்டால் ஊடகங்கள் வாயிலாக மக்களுடன் தொடர்பில் இருந்தனர்" என்றார்.

ஆனால், டெல்லி அரசியல் வட்டாரத்தில் உள்ள செய்தித் தொடர்பாளர்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக தெரிவிக்க முடியும். ஆனால், தமிழக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் தாங்கள் பேசவிருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் நிதானித்துப் பேச வேண்டும். ஒரு வார்த்தை தவறினால்கூட கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரும்.

திமுக தலைமையின் கருத்துடன் ஒத்திராத கருத்துகளை தெரிவித்ததற்காக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கட்சித் தலைமையின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

டி.கே.எஸ்.இளங்கோவன் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வேலையை பல ஆண்டுகளாக செய்துவந்தாலும் கடந்த ஆண்டுதான் அவர் முறைப்படி அப்பதவியில் அமர்த்தப்பட்டார்.

இந்நிலையில் செய்தித்தொடர்பாளர் பதவி குறித்து அவர் கூறும்போது, "ஒரு செய்தித்தொடர்பாளர் ஒவ்வொரு பிரச்சினையிலும் கட்சித் தலைமையின் நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல், கட்சியின் கொள்கையையும், கட்சியின் திட்டங்களையும் நன்றாகவே புரிந்து வைத்திருக்க வேண்டும். பிரச்சினைகளில், என்னுடைய சொந்த கருத்துகளை தெரிவித்தபோது மட்டுமே கட்சித் தலைமையால் நான் கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன்" என்றார்.

சேட்டிலைட் சேனல்களும், செய்தித்தாள்களும் புற்றீசல் போல் பெருகிவிட்ட சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க செய்தித்தொடர்பாளர்களை நியமிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு விதிவிலக்காக தேமுதிக மட்டும் திகழ்கிறது.

செய்தித் தொடர்பாளர் பணியை எப்படி நேர்த்தியாக செய்யலாம் என ஞானதேசிகன் கூறும்போது, "கட்சித் தலைமையின் மனநிலை குறித்த தெளிவான புரிதலும், கட்சி பயணிக்கும் திசையை நன்கு உணர்ந்திருந்தாலே இப்பதவியை செவ்வனே செய்யலாம். மூப்பனார், எனக்கு நல்ல சுதந்திரம் அளித்திருந்தார். 1998-ல் ஐக்கிய முன்னணியில் எங்கள் கட்சி வெளியேறுவதையே நான்தான் அறிவித்தேன்" என்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தபோதும் சரி தற்போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருக்கும்போதும் சரி பல்வேறு சவால்களை சந்தித்திருப்பதாக கூறுகிறார் கோப்பண்ணா. அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்பது என்பது முகவும் கடினமாக பணியே என அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x