Published : 16 Feb 2014 12:00 AM
Last Updated : 16 Feb 2014 12:00 AM

ஒசூர் அருகே யானை மிதித்து இளைஞர் பலி- பட்டாசு வெடித்து விரட்ட முயன்றதால் விபரீதம்

ஏரியில் குளித்துக் கொண்டிருந்த காட்டு யானைகளை பட்டாசு வெடித்து விரட்ட முயன்றபோது, வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டத்தில் புகுந்த ஒரு யானை ஆக்ரோஷத்துடன் இளைஞரைக் குத்திக் கொன்றது. இச்சம்பவத்தால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள போடூர்பள்ளம், சானமாவு, பீர்ஜேப்பள்ளி, சூளகிரி பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக 3 யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. பகல் நேரங்களில் வனப்பகுதிகளில் முகாமிட்டும், இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அட்டக்குறுக்கி கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று காலை 3 யானைகள் சுவாரஸ்ய மாகக் குளித்துக் கொண்டிருந்தன. இதை கேள்விப்பட்டதும், தேசிய நெடுஞ் சாலைகளில் சென்றவர்களும், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பொதுமக்களும் திரண்டனர். யானைகள் குளித்துக் கொண்டிருந்த ஏரியைச் சுற்றி பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், வனத்துறையினர் பொதுமக்களை ஒருபுறம் இருக்குமாறு எச்சரிக்கை செய்துவிட்டு, பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது, ஏரியில் குளித்துக் கொண்டிருந்த 3 யானைகள் கரையை நோக்கி மேலே வந்தது.

வனத்துறையினரின் வெடிச் சத்தத்தில் மிரண்டுபோன ஒரு ஆண் யானை மட்டும் மக்கள் கூட்டத்தை நோக்கி திரும்பி வேகமாக ஓடிவந்தது. ஏரியைச் சுற்றி நின்று கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் நாலபுறமும் சிதறி ஓடினர்.

யானை துரத்தியதில் கூட்டத்தி லிருந்த ஒசூர் அருகேயுள்ள பன்னப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவர் மட்டும் ஏரியில் குதித்து தப்பிச் செல்ல முயன்றார். யானையும் தண்ணீரில் இறங்கியது. வெங்கடேஷை விடாமல் துரத்தியது. யானையிட மிருந்த தப்பிக்க எதிர் கரைக்கு வெங்கடேஷ் நீந்தினார்.

கரையில் நின்றிருந்த சிலரும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். அதற்குள் யானை துரத்தி வந்து வெங்கடேஷை தும்பிக்கையால் சுற்றி வளைத்து பிடித்தது. தொடர்ந்து அவரது இடுப்பில் தந்தத்தால் குத்தி காலால் மிதித்தது. சிறிது நேரத்தில் ஆத்திரம் தீர்ந்த பிறகு காட்டுக்குள் சென்றுவிட்டது.

இதை அப்பகுதி மக்கள் தூரத்திலிருந்து அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்க டேஷை, மக்கள் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். யானை தாக்கி உயரிழந்த வெங்கடேஷுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையில் அட்டக்குறுக்கியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்த கிருஷ்ணகிரி எஸ்பி கண்ணம்மாள், ஓசூர் டிஎஸ்பி கோபி மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

யானைகளை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போலீஸார் தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x