Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM

தமிழக அரசின் 2 ஆணைகள் ரத்து; விதிமீறல் கட்டிடங்களுக்கு ஆபத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு வெளியிட்ட இரண்டு அரசாணைகள் செல்லாது என கூறி, அவற்றை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் மேற்கொண்டது.

113-சி என்ற புதிய பிரிவை அந்தச் சட்டத்தில் சேர்த்தது. இந்தப் புதிய பிரிவின்படி, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்காக கடந்த 30.10.2012-ல் தமிழக அரசு இரண்டு அரசாணைகளை வெளியிட்டது. 1.7.2007-க்கு முன்பு வரை விதிமுறைகளுக்கு மாறாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவது மற்றும் பல வழிமுறைகள் அந்த அரசாணைகளில் கூறப்பட்டிருந்தன.

இந்த அரசாணைகளை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த நுகர்வோர் நடவடிக்கைக் குழு மற்றும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களில், ‘1.7.2007-க்கு முன்பு வரை விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்களை வரன்முறை செய்வது மற்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ள பிற வழிமுறைகள் யாவும் விதிமுறைகளை மீறி சட்ட விரோதமான முறையில் கட்டிடம் கட்டுவோரை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. இந்த அரசாணைகளின்படி, சட்ட விரோதக் கட்டிடங்கள் வரன்முறை செய்யப்பட்டால், அதனால் பொதுமக்களின் நலன்கள் பெருமளவில் பாதிக்கப்படும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு, கடந்த 30.10.2012 அன்று தமிழக அரசு வெளியிட்ட இரண்டு அரசாணைகளும் செல்லாது என கூறி அவற்றை ரத்து செய்து திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டப் பிரிவு 113சி அமல் படுத்தப்பட சரியான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், 30.10.2012-ல் வெளியான அரசாணைகளில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் சரியாக இல்லாததால், அவை ரத்து செய்யப்படுகின்றன.

ஏற்கெனவே செயல்படும் குழு மூலமாகவோ, புதிய குழுவை அமைத்தோ சரியான விதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் அலட்சியமான அணுகுமுறை காரணமாக விதிமுறைகளை மீறும் சட்ட விரோதமான கட்டிடங்கள் காளான்கள் முளைப்பதைப் போல பெருகியுள்ளன. அதுபோன்ற சட்ட விரோதக் கட்டிடங்கள் இனியாவது எதிர்காலத்தில் உருவாகாமல் மாநில அரசும். அதிகாரிகளும் தடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

மேலும், எந்தத் தேதி வரை கட்டப்பட்ட சட்ட விரோதக் கட்டிடங்களை வரன்முறை செய்வது என்பதற்கான காலக்கெடுவை அரசு மேலும் நீட்டிக்காது என்று நம்புகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x