Published : 12 Sep 2016 12:51 PM
Last Updated : 12 Sep 2016 12:51 PM

சுற்றுலா பயணிகள், மாணவர்களை ஈர்க்கும் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ‘இயற்கைப் பள்ளி’

முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைக்கப்பட்டுள்ள, ‘இயற்கைப் பள்ளி ’ சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் 56 சதவீதம் வனப்பரப்பைக் கொண்டது. தமிழகத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகத்தில் ஒன்று, இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சரணாலயத்தில் ஆசியாவின் மிகப்பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. மொத்தம் 321 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயம் கடந்த 2007-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

சிறிய பரப்பளவுடைய முதுமலையில், தமிழகத்திலேயே அதிக அளவிலான புலிகள் வசிக்கின்றன. 321 சதுர கி.மீட்டரில் சுமார் 125 புலிகள் உள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாது காக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் முக்கியமானது விழிப்புணர்வு. மக்களிடையே இயற்கை மற்றும் வன விலங்குகள் குறித்து வனத்துறை பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

மாணவர்களுக்கான விழிப் புணர்வு, சூழல் சுற்றுலாக்கள், தகவல் மையங்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமானது முதுமலை தெப்பக்காட்டில் உள்ள ‘இயற்கைப் பள்ளி’. முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்கள் குறித்து, சுற்றுலா பயணிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், ‘இயற்கைப் பள்ளி’ அமைக்கப்பட்டு உள்ளது.

உள்ளே செல்லும்போது, வனத்தில் சென்று வருவது போன்ற உணர்வு ஏற்படும் வகையில், நவீன ஒளி, ஒலி தொழில்நுட்பத்தின் மூலம் வன விலங்குகளின் இயற்கையான சப்தங்களை ரசிக்கலாம். முதல் அறையில், பறவைகள் குறித்த விவரங்கள், அடுத்த அறையில் முதுமலை வரலாறு, இருட்டறையில் உலா வரும் சிறு உயிரினங்களின் தோற்றம், புலி, யானை, சிறுத்தை உள்ளிட்டவற்றின் படங்கள் மற்றும் அதன் மீது சென்சார் முறையில் சப்தத்துடன் வரும் ஒலி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. கடைசி அறையில், இறந்த வன உயிரினங்களின் எலும்புகள், பதப்படுத்தப்பட்ட சில வன உயிரினங்களின் உருவங்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ஆர்.ரெட்டி கூறும்போது, ‘இயற்கைப் பள்ளி ’ க்குள் சென்று வருவதன் மூலம், வனத்துக்குள் சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. இயற்கைச் சூழலில் இப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளதால், உள்ளே செல்லும் குழந்தைகள் அச்சப்பட்டாலும் மகிழ்ச்சி அடைகின்றனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x