Published : 06 Jun 2017 11:48 AM
Last Updated : 06 Jun 2017 11:48 AM

இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்ததாக தாய் கைது: ஆண் குழந்தை மோகத்தில் நாகர்கோவிலில் விபரீதம்

நாகர்கோவிலை அடுத்த காற்றாடித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (39). இவரது மனைவி திவ்யா (29). இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இத்தம்பதிக்கு கடந்த மாதம் 22-ம் தேதி இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. பிரசவத்துக்கு பின்பு திவ்யா, கோட்டாறு கன்னங்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.

ஆனால், கணவரும், அவரது வீட்டாரும் குழந்தைகளைப் பார்க்க வரவில்லை. இதுபற்றி விசாரித்த போது, திவ்யா இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றதே காரணம் என்பது தெரியவந்தது. கடந்த 2-ம் தேதி திவ்யாவின் இரட்டை பெண் குழந்தைகளும் திடீரென இறந்து விட்டன.

இத்தகவல் திவ்யாவின் கணவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே கன்னங்குளம் வந்து குழந்தைகளின் சடலத்தை காற்றாடித்தட்டுக்கு கொண்டு சென்று, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

குமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குமுதாவுக்கு, இச்சம்பவம் பற்றி சிலர் அதிர்ச்சி தகவல்களைக் கொடுத்தனர். அதில், திவ்யா இரட்டை பெண் குழந்தைகள் பெற்றதால், அந்த குழந்தைகளை அவரே கொலை செய்து விட்டதாக தெரிவித்தனர்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதா மற்றும் அதிகாரிகள் காற்றாடித்தட்டு சென்று, குழந்தையின் கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திவ்யாவிடம் விசாரணை நடத்திய போது, `குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்த பின் குழந்தைகள் இருவரும் கண்விழிக்கவில்லை எனவும், பால் புரை ஏறியதில் மூச்சுத்திணறி அவர்கள் இறந்து விட்டதாகவும்’ தெரிவித்தார்.

திவ்யா கூறிய பதிலில் சந்தேகம் ஏற்பட்டது. இது பற்றி கோட்டாறு போலீஸில், அதிகாரிகள் புகார் செய்தனர். நேற்று முன்தினம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருள்அரசு முன்னிலையில், இரட்டை குழந்தைகளின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. அவற்றை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை உடற்கூறியல் பிரிவு மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இதில், குழந்தைகள் இயற்கையாக மரணமடையவில்லை என்பது உறுதியானது.

குழந்தைகளின் தாய் திவ்யாவிடம் விசாரணை நடத்தியதில், தனது கணவரின் குடும்பத்தில் யாருக்கும் ஆண் குழந்தைகள் இல்லை. அதுபோல தனக்கும் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது கர்ப்பம் அடைந்ததும், ஆண் குழந்தையாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதுவும் இரட்டை பெண் குழந்தையாக பிறந்து விட்டது.

எனக்கு பெண் குழந்தைகள் பிறந்திருக்கும் தகவல் என் கணவருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு நாள் கூட என்னை வந்து அவர் பார்க்கவில்லை. இதற்கு காரணம் எனக்கு பிறந்த பெண் குழந்தைகளே என்று நினைத்தேன். எனவே அந்த குழந்தைகள் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.

கடந்த 2-ம் தேதி காலையில் பால் கொடுத்த போது, இரண்டு குழந்தைகளின் முகத்தையும் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டேன். இதில், இரு குழந்தைகளும் மூச்சு திணறி இறந்து விட்டன” எனக் கூறியுள்ளார்.

திவ்யாவை கோட்டாறு போலீஸார் கைது செய்தனர். திவ்யாவின் கணவர் கண்ணனிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x