Published : 30 Mar 2014 11:49 AM
Last Updated : 30 Mar 2014 11:49 AM

வங்கி ஊழியர் கொலை: 4 திருநங்கைகளுக்கு வலை - இறந்தவரின் உறவினர்கள் ரயில் மறியல் போராட்டம்

வங்கி ஊழியரை கொன்ற திரு நங்கைகளை கைது செய்யக் கோரி, அவரின் உறவினர்கள் சனிக்கிழமை பொன்னேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி ஆலாடு சாலையில் வசித்து வந்தவர் சீனிவாசன் (எ) லிங்கம். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர் பழவேற்காடு இந்தியன் வங்கியில் குமாஸ்தாவாக பணிபுரிகிறார்.

வெள்ளிக்கிழமை பணி முடிந்து பொன்னேரி வந்தார். பின்னர், அங் கிருந்து அவர் மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோயில் பிரதோஷ விழாவில் பங்கேற்க ரயிலில் சென்றார். அப்போது, ரயிலில் லிங்கத்தை 5 திருநங்கைகள் சூழ்ந்து கொண்டு தகாத வார்த்தைகள் கூறி வெறிச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கிய அவரை, திருநங்கைகள் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து, மீஞ்சூர் போலீஸார் மற்றும் கொருக் குப்பேட்டை ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்த லிங்கத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு முற்றுகையிட்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி னர். இந்த சம்பவம் தொடர்பாக, பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில் வசிக்கும் சங்கீதா (19) என்ற திருநங்கையை கைது செய்தனர். மேலும், 4 திருநங்கைகளைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்து இறந்த லிங்கத்தின் உறவினர்கள் சனிக்கிழமை பொன் னேரி ரயில் நிலையத்தில், சென்னை யில் இருந்து கும்மிடிப்பூண்டி சென்ற மின்சார ரயில் முன் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, லிங்கத்தை அடித்துக் கொலை செய்த திருநங்கைகள் 5 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து வரும் கொருக்குப்பேட்டை இருப்புப் பாதை காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்ததையடுத்து, ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து, பொன்னேரி ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x