Published : 26 Oct 2014 01:11 PM
Last Updated : 26 Oct 2014 01:11 PM

ஆட்டோவுக்கு அரசு கட்டண நிர்ணயம் என்ன ஆனது? - பழைய முறைப்படி ‘பேரம் பேசி’ மீண்டும் கட்டண வசூல்

ஆட்டோவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில், பழைய முறைப்படி ஆட்டோ ஓட்டுநர்கள் பேரம் பேசி மீண்டும் கட்டணம் வசூலிக்க தொடங்கிவிட்டனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அப் போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி குறைந்த பட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக கி.மீ.க்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய ஆட்டோ கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்தது. ஜிபிஎஸ் (வாகன நகர்வு கண்காணிப்பு) தொழில்நுட்ப வதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்கள் 2014 பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. இதையும் ஒரு காரணமாக காட்டி, ஆட்டோ ஓட்டுநர்கள் மீண்டும் பேரம் பேசி கட்டணம் வசூல் செய்ய தொடங்கியுள்ளனர்.

தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை காட்டிலும் பல மடங்கு அதிகரித்து வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.35 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பொது மக்கள் மத்தியில் மீண்டும் அதிருப் தியை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து ஆட்டோ தொழி லாளர்கள் சம்மேளன (ஏஐடியூசி) மாநில பொதுச்செயலாளர் சேஷசயனம் கூறுகையில், ‘‘அரசு அறிவித்தப்படி பிப்ரவரி இறுதிக்குள் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் வழங்க வில்லை. 3 அல்லது 6 மாதத்துக்கு ஒருமுறை எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்றவாறு கட்டணத்தை மாற்றியமைக்க முத்தரப்பு கமிட்டியும் அமைக்கப்படவில்லை. இதனாலேயே, செலவை ஈடுசெய்ய முடியாமல் ஓட்டுநர்கள் சிலர் மீண்டும் பழைய நிலைக்கு மாற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு போக்குவரத்து துறையின் மெத்தனப் போக்குதான் காரணம். எங்களின் கோரிக்கை வலியுறுத்தி தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு, அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் கலந்து ஆலோசனை நடத்தவுள்ளோம். இதில், முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிக்கவுள்ளோம்’’ என்றார்.

இது தொடர்பாக போக்குவரத்து துணை ஆணையரக அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘போக்குவரத்து ஆணையரகத்தில் கீழ் இயங்கும் ஆர்டிஓக்களில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. ஏற்கெனவே இருந்ததை காட்டிலும், தற்போது ஆர்டிஒக்களில் பணிகள் அதிகரித்துவிட்டன. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்கள் மீது ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனால், ஆட்டோக்களில் நடத்தப்பட்டு வந்த ஆய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் மீண்டும் ஆய்வு நடத்தப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது அபராதம் வசூலிக்கப்படும். தொடர்ந்து 3 முறை சிக்கினால், பர்மிட் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x