Last Updated : 21 Aug, 2016 11:38 AM

 

Published : 21 Aug 2016 11:38 AM
Last Updated : 21 Aug 2016 11:38 AM

பூட்டிக்கிடக்கும் மதுரை புறக்காவல் நிலையங்கள்: சமூக விரோதிகளின் கூடாரமாகும் அவலம்

மதுரை மாநகரில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக தொடங்கப்பட்ட புறக்காவல் நிலையங்கள் பல இடங்களில் செயல்படாமல் உள்ளன. போலீ ஸார் பற்றாக்குறையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

மதுரை மாநகரில் 4 மகளிர், 3 போக்குவரத்து புலனாய்வு பிரிவு உட்பட சட்டம், ஒழுங்கு, குற்றப் பிரிவு என, 25 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இது தவிர சிறப்பு புலனாய்வு பிரிவுகளும் இயங்குகின்றன.

பொதுவாக சட்டம், ஒழுங்கு பாதிப்பு மற்றும் குற்ற நடவடிக் கைகள் அதிகமாக இருக்கும் காவல் நிலைய எல்லைப் பகுதிகளில், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, மதுரை மாநகரில் 40-க்கும் மேற்பட்ட புறக்காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு 24 மணிநேரமும் 2 அல்லது 3 காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரையில் 50 சதவீத புறக்காவல் நிலையங்கள் செயல்படாமல் பூட்டிக்கிடக்கின்றன. அவை தூசி படிந்து, கால்நடைகள் புகுமிடமாக மாறி வருகின்றன. மதுரை அண்ணாநகர் புறக்காவல் நிலையம் உட்பட சில புறக்காவல் நிலையம் ஆண்டுக்கணக்கில் மூடிக்கிடக்கின்றன.

சமூக விரோதச் செயல்கள்

குற்றங்களை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இப் புறக்காவல் நிலையங்கள், இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் கூடமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பூட்டிக்கிடக்கும் புறக்காவல் நிலையங்களை முறையாக செயல்படுத்த காவல் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீஸ் பற்றாக்குறை

காவல் நிலையங்களில் தேவையான காவலர்கள் எண்ணி க்கை இல்லாதபோது, அங்கு ஆயுதப்படை போலீ ஸாருக்கு மாற்றுப் பணி வழங்க ப்படுகிறது. அந்த வகையில் மதுரை மாநகரில் ஆயுதப்படை போலீஸார் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரிகின்றனர். எனினும், இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறியதாவது:

“புறக்காவல் நிலையம் அமைந்திருக்கும் இடங்களில் 30 சதவீதம் வரை குற்றச்செயல்கள் குறைய வாய்ப்புள்ளது.

அதன் காரணமாகத்தான் பல இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக் கப்பட்டுள்ளன.

போலீஸார் பற்றாக்குறை காரணமாகவே சில புறக்காவல் நிலையங்கள் பூட்டிக்கிடக்கின்றன. அதே சமயம், முக்கிய சந்திப்புகளில் உள்ள புறக்காவல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன. விரைவில் அனைத்தும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x