Published : 05 Jul 2016 12:11 PM
Last Updated : 05 Jul 2016 12:11 PM

மதுரையில் குடிநீர் இல்லை: தினமும் மக்கள் மறியல் செய்வதால் போலீஸார் திணறல்

மதுரையில் நேற்று 2 இடங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால் மறியலில் ஈடுபடும் பொதுமக்களை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

மாநகராட்சியில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு மீண்டும் தலைதூக்கி உள்ளது. தற்போது பெரும்பாலான வார்டுகளில் 4 நாளுக்கு ஒரு முறையே விநியோகிக்கப்படுகிறது. சில வார்டுகளில் 2 நாளுக்கு ஒரு முறை வழங்கினாலும், குறைவான நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

சில இடங்களில் பாதாளசாக்கடை உடைந்து குடிநீருடன் கழிவு நீர் கலக்கிறது. கவுன்சிலர்கள், மாநகராட்சி கூட்டத்தில் முறையிட்டும் குடிநீர் குழாய்கள் 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதால் அவற்றை உடனடியாக சீரமைக்க முடியாமல் மாநகராட்சி திணறி வருகிறது. அதனால், தொடர்ந்து சில நாளாக பொதுமக்கள் மறியல் செய்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 2 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். தெற்கு வெளி வீதி மீனாட்சிப்பள்ளம், காஜா தெரு பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 4 நாளுக்கு ஒரு முறை வரும் குடிநீரிலும் சாக்கடை கலந்து வந்தது. பொதுமக்கள் புகார் தெரிவித்தும் குடிநீர் வழங்கவும், சாக்கடை நீர் கலப்பையும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதிருப்தியடைந்த அப்பகுதி பெண்கள் காலிகுடங்களுடன் நேற்று தெற்குவெளிவீதி பாண்டி வேளாளர் தெரு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பொதுமக்களை சமாதானம் செய்து குடிநீர் வழங்க உறுதியளித்தனர்.

மதுரை மேலவாசல் ஹீராநகர் பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிருப்தியடைந்த பெண்கள் திடீர்நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், முத்துபாலம் திடீர் நகர் பகுதி இறக்கத்திலும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானம் செய்து கலைந்துபோக செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x