Published : 11 Jan 2014 11:58 AM
Last Updated : 11 Jan 2014 11:58 AM

கருணாநிதியை சந்தித்து அழகிரி பொங்கல் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதியை தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி இன்று சந்தித்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் கருணாநிதியை அழகிரி சந்தித்து பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை தனது குடும்பத்தினருடன் திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு வந்தார். ஆனால், கருணாநிதி ஓய்வில் இருந்ததால் அவரை மு.க.அழகிரியால் சந்திக்க முடியவில்லை.

சமீபத்தில், தனியார் தொலைக்காட்சிக்கு மதுரையில் பேட்டியளித்த அழகிரி, தேமுதிகவுடனான கூட்டணி குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தலைமை வட்டாரத்தில் எதிர்ப்புக் கிளம்பியது.

இதையடுத்து, 'அழகிரியின் கருத்து வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது என்றும், கட்சி கட்டுப்பாட்டை மீறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார்.

இதனையடுத்து, கருணாநிதியை நேரில் சந்திக்கச் சென்றார் அழகிரி ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. அரை மணி நேரத்துக்குப் பின் அங்கிருந்து திரும்பினார். அவரை தாய் தயாளு அம்மாள் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.அப்போது பத்திரிகை யாளர்கள் அவரை சூழ்ந்து பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் எதுவும் பேசாமல் மவுனமாக அழகிரியும், அவரது குடும்பத்தினரும் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், இன்று காலை கருணாநிதியை அழகிரி சந்தித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும், குடும்பத்தார் அனைவரது நலன் குறித்தும் கருணாநிதி விசாரித்ததாகவும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x