Published : 28 Oct 2014 08:22 AM
Last Updated : 28 Oct 2014 08:22 AM

விடுதலைப் புலிகள் மீதான தடை ரத்தாகுமா?- 30-ல் தெரியும்; தீர்ப்பாயத்தில் வைகோ வாதம்

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை குறித்த தீர்ப்பாயத்தின் விசாரணை நிறைவடைந்தது. வரும் 30-ம் தேதி தடை ரத்தாகுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது தெரியவரும்.

விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிப்பு தீர்ப்பாய விசாரணை குன்னூர் நகர்மன்ற கூட்டரங்கில் நேற்று 2-வது நாளாக நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி மிட்டல் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது 2 உளவுத் துறை காவல் அதிகாரிகளின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறுக்கு விசாரணை செய்தார். நேற்று விசாரணை தொடங்கியதும் சென்னை நகர உளவுப் பிரிவு ஆய்வாளர் வேலன், கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலைப் புலிகள் ஆதரவாளரை சென்னையில் கைது செய்தோம். அவரைத் தொடர்ந்து மேலும் சிலரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டோம். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களும், ஆவணங்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்

குறிக்கிட்ட வைகோ, இந்த 6 பேரும் விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம். அவர்களை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு வேலன், இல்லை. சாட்சிகள் 4 பேர் மட்டுமே நீதிபதியிடம் சாட்சி அளித்தனர் என்றார்.

இதைத் தொடர்ந்து வைகோ தனது வாதத்தை முன்வைத்தார்.நீதிபதி மிட்டல், தமிழ் ஈழம் குறித்த விவரங்களை கூற வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த வைகோ, தமிழ் ஈழம் உருவாவதால் அப்பாவி தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பல தொழில்கள் செய்து பிழைப்பு நடத்தி வந்தாலும் தமிழகத்துக்கு வந்தால் அவர்களை விடுதலைப் புலிகள் என முத்திரை குத்தி போலீஸார் கைது செய்கின்றனர், இது ஏற்கத்தக்கது அல்ல.

விடுதலை புலிகள் யாரும் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை. அனைவரும் அறவழிப் போராட்டத்தில்தான் ஈடுபட்டு வந்தனர். அதன்பின்னர் தமிழர்கள் மீது தாக்குதல் அதி கரித்ததால்தான் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது என்றார்.

இலங்கையில் நடந்த போரில் அந்நாடு வெற்றி பெறுவதற்கு இந்தியா உதவியதாக ராஜபக்சே தெரிவித்தார். இதை தமிழர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். தமிழக சட்டசபையிலும் தமிழ் ஈழத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆளும்கட்சி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதேபோல் இந்த அமைப்புக்கு இனியும் தடைவிதிக்க வேண்டிய சூழல் எதுவும் இல்லை. 2 மற்றும் 5 ஆண்டுக்கு ஒருமுறை இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு தடை நீட்டிக்கவும் வேண்டாம். தொடர்ந்து இந்த அமைப்புக்கு தமிழகத்தில் தடையை நீக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து தீர்ப்பாய விசாரணை நிறைவடைந்தது. வரும் 30-ம் தேதி டெல்லியில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை ரத்தாகுமா அல்லது நீட்டிக்கப்படுமா என அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x