Last Updated : 05 Sep, 2016 09:44 AM

 

Published : 05 Sep 2016 09:44 AM
Last Updated : 05 Sep 2016 09:44 AM

இன்ஸ்பெக்டர் காஞ்சனா தற்கொலை முயற்சி சம்பவம்: காவல்துறை இனிமேலாவது தங்கள் துறை விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்குமா?

விளையாட்டில் சிறந்து விளங்கும் தமக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத வருத்தத்தில் பெண் இன்ஸ்பெக்டர் காஞ்சனா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் காவல்துறை இனிமேலாவது விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டப் பேரவை வளாகத்துக்குள் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் காஞ்சனா கடந்த 2-ம் தேதி சீருடையுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

யார் இந்த காஞ்சனா?

காஞ்சனாவின் தந்தை சென்னை ஐசிஎப் ஊழியர். குத்துச்சண்டை வீரர். பயிற்சிக்கு செல்லும்போது சிறுமியாக இருந்த காஞ்சனாவை கூடவே அழைத்துச் செல்வாராம். தந்தை கொடுத்த ஊக்கத்தால் காஞ்சனா விளையாட்டு வீரராக உருவெடுத்தார். 200, 400, 1,500 மீட்டர் தடகள ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொண்டு வென்றுள்ளார்.

பள்ளி, கல்லூரிகளில் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளார். அத்துடன் மாநில அளவிலான காவல்துறை தடகள போட்டி களிலும் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் அசத்தி இருக்கிறார். ஆசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன் போட்டிகளிலும் காஞ்சனா பங்கேற் றுள்ளார். பாங்காக்கில் நடந்த பந்த யங்களில் 2 தங்கம், 1 வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்றார்.

2008 மலேசியாவில் நடந்த போட்டிகளில் 5 பதக்கங்கள், தைவானில் 4 பதக்கங்கள், மறுமுறை மலேசியா சென்று 4 பதக்கங்களை தட்டிச் சென்றார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், சான்றிதழ்களை பெற்றுள்ளார். ஆனால், அவருக்கு காவல்துறை அதிகாரிகள் சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்ற குறை இருந்ததாம்.

மேலும் அடிக்கடி இட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டருக்கு கொடுக்க வேண்டிய போலீஸ் வாகனமும் வழங்கப்படவில்லையாம். இது பற்றி உயர் அதிகாரிகளிடம் முறை யிட்டும் அவர்கள் கண்டுகொள்ள வில்லையாம். இதை முதல்வர் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்ல முயன்றவர் அதற்கு வாய்ப்பு கிடைக்காததால், தற்கொலைக்கு முயன்று முதல்வர் கவனத்தை ஈர்த்திருக்கலாம் என்று அவரது தோழிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சனாவுக்கு மட்டுமா? அல்லது அவரைப் போல் காவல் துறையில் உள்ள மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் இதே நிலையா? என்று கேட்டபோது காவல் துறையில் உள்ள விளையாட்டு வீரர்கள் கூறியதாவது:

காவல்துறை சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது தவிர குற்றவாளிகளை பிடிக்கும் நுட்பம், தடயங்களை சேகரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மண்டல வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்கள் அகில இந்திய அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்வார்கள். ஆனால், மண்டல அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் பலர் அதற்கு மேல் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உயர் அதிகாரிகள் அனுமதி வழங்குவது இல்லை.

பாதுகாப்புப் பணி இருக்கிறது, ஆகையால் அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்து எங்களை முடக்கிவிடுகின்றனர். அவர்களை மீறி எங்களால் எதுவும் செய்ய இயலாது. எனவே, நாங்கள் மன ரீதியாக பாதிக்கப்படுகிறோம். எனவே, வெற்றி பெற்ற வீரர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் ஊக்கம் கொடுத்து அதற்கு மேல் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து துணை ஆணையர் ஒருவர் கூறும்போது, “காவல்துறை சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை அதற்கு மேல் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். அதன்படி செய்கிறோம். சில நேரங்களில் அதி முக்கிய பணிகள் வந்துவிடுவதால் அந்த நேரத்தில் மட்டும் சிறு கட்டுப்பாடு விதிக்கிறோம்” என்றார்.

சென்னை தலைமையிட கூடுதல் காவல்துறை ஆணையர் சேஷசாயி, “விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் அனைத்து போலீஸாருக்கும் ஊக்கம் அளித்து வருகிறோம். அவர்களுக்கு எந்த தடையும் விதிப்பது இல்லை” என்றார்.

இதுகுறித்து, மாநில பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் க.பாண்டியராஜனிடம் கேட்ட போது, ‘‘சட்டப்பேரவையில் முதல் வர் ஜெயலலிதா விதி எண்.110-ன் கீழ் விளையாட்டுத் துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, சென்னை மெரினாவில் பாய்மர படகு அகாடமி, ஊட்டியில் உயரமான பகுதியில் விளை யாட்டுப் பயிற்சிகள் மேற்கொள் வதற்கான வசதிகள் ஏற்படுத்தப் படும் என தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள விளை யாட்டுப் பல்கலைக்கழகத்தில் சைக்கிளிங் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்வதற்கான பயிற்சி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இம்மையம் திறக்கப்பட உள்ளது. அத்துடன், 32 மாவட்டங்களிலும் விளையாட்டுப் பயிற்சிகளை அளிக்க பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

விளையாட்டு பிரிவின் கீழ் பணியில் சேர்ந்தவர்கள் மேற் கொண்டு அவர்கள் விளையாட் டில் ஈடுபடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அவர்கள் விளையாட்டில் ஈடுபடுகின்றார்களா என்பதை அரசு தொடர்ந்து கண்காணிக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x