Published : 30 Jun 2017 09:57 AM
Last Updated : 30 Jun 2017 09:57 AM

கும்பகோணம் அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி மதுபாட்டில்களை உடைத்து பெண்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே திருச்சேறை குளத்தின் கரையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடக் கோரி, கடையின் மதுபாட்டில்களை உடைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே திருச்சேறை மேலவீதியில் 5 ஏக்கரில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தின் கரையில் தொகுப்பு வீடு கட்டப்பட்டு, அங்கு டாஸ்மாக் கடை ஒன்று கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கடைக்கு வருபவர்கள் குளத்தின் கரையில் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்தும், குளத்தின் கரைகளிலும் அமர்ந் தும் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை கரையில் வீசுவதால், அப்பகுதியில் நடந்து செல்லக்கூட முடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

முற்றுகைப் போராட்டம்

இந்த கடை உச்ச நீதிமன்ற விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 29-ம் தேதி (நேற்று) முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அங்கு திரண்ட பெண்கள், கடையின் இரும்பு கேட்டை உடைத்து டாஸ்மாக் கடைக்குள் சென்றனர். அங்கிருந்த மதுபாட்டில்களை பெட்டியுடன் வெளியே தூக்கி வந்து கடையின் முன் போட்டு உடைத்தனர்.

தகவலறிந்து கும்பகோணம் வட்டாட்சியர் கார்த்திகேயன், திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். பெண்களின் போராட்டத்தால் நேற்று இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட வில்லை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x