Published : 06 Jun 2017 12:16 PM
Last Updated : 06 Jun 2017 12:16 PM
கோடை வெயிலின் தாக்கத்தால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளிவைக்க எம்எல்ஏக்கள் வலியுறுத்தியதால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறப்பை வரும் 12-ம் தேதிக்கு மாற்றியுள்ளதாக கல்வியமைச்சர் கமலகண்ணன் இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கோடைகால விடுமுறை முடிந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 7-ம் தேதி திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கிறது.
பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் பள்ளிகள் திறக்கும் தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள் சிவா (திமுக), வையாபுரி மணிகண்டன் (அதிமுக), அரசு கொறடா அனந்தராமன், உள்ளிட்டோர் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதிலளித்த கல்வியமைச்சர் கமலகண்ணன், "பள்ளிகளில் பாடத்திட்டம் அதிகளவு உள்ளது. பள்ளி நடைபெறும் நாட்களோ குறைவாக இருக்கிறது. மழை வந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை தேவைப்படுகிறது. இதனால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட வேண்டியுள்ளது.
இதுநாள்வரை செய்தியாளர்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து பள்ளி திறப்பு தொடர்பாக கேள்விகள் வந்தன. தற்போது எம்எல்ஏக்களும் கேட்கின்றனர்.
கோடை வெப்பம் நீடிக்கும் சூழலால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் வரும் 12-ம் தேதி திறக்கப்படும். விரைவில் கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்கும்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT