Published : 25 Feb 2014 02:40 PM
Last Updated : 25 Feb 2014 02:40 PM
வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் வகையில் ஆணையம் அமைக்கப்படும் என்ற கர்நாடக முதல்வரின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகள் நலனைக் காக்கும் வகையில் கர்நாடக முதல்வர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இடைத்தரகர்களும், விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு விலை நிர்ணயம் செய்யும் அவலநிலை நிலவுகிறது.
தமிழ்நாட்டில் வேளாண் தொழில் ஊக்குவிக்கப்படாததால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்ற, கர்நாடக அரசை பின்பற்றி வேளாண் விளைபொருட்களுக்கு உழவர்களே விலை நிர்ணயம் செய்யும் வகையில் அவர்களை உறுப்பினராகக் கொண்ட ஆணையத்தை அமைக்க வேண்டும்.
சந்தைகளில் இடைத்தரகர்களுக்கு பதில் விவசாயிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தங்களின் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிடுவதுடன், முதலமைச்சர் தலைமையில் தனி அமைச்சரவைக் குழுவையும் ஏற்படுத்த வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT