Published : 12 Jun 2017 09:54 AM
Last Updated : 12 Jun 2017 09:54 AM

உங்கள் குரல்: ஆதார் நிரந்தர மையங்களில் முதியோரின் கைரேகையை பதிவதில் சிக்கல்

ஆதார் நிரந்தர மையங்களில் முதியோருக்கு கை ரேகை பதிவதில் சிக்கல் ஏற்படுவதாக வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை பாரிமுனையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையை தொடர்புகொண்டு கூறியதாவது:

என் அம்மாவுக்கு 95 வயது ஆகிறது. அவரை, அரசு ஆதார் நிரந்தர மையத்துக்கு அழைத்துச் சென்று, ஆதார் பதிவு செய்தபோது, வயது முதிர்வு காரணமாக, அவரது கை ரேகை பதிவாகவில்லை. இதனால் இரு முறை சென்றும், ஆதார் பதிவு செய்ய முடியவில்லை என திருப்பி அனுப்பிவிட்டனர். தற்போது அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் கேட்கப்படுகிறது. முதியோருக்கு கைரேகை பதிவதில் சிக்கல் உள்ள நிலையில், கருவிழியை மட்டும் பதிவு செய்து, ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுராந்தகத்தை சேர்ந்த முரளிமோகன் என்பவர் ‘உங்கள் குரல்’ சேவை தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூறும்போது, “முதியோரின் கை விரல் ரேகையை எளிதில் பதிவுசெய்ய முடியவில்லை. ஆதார் எண் கிடைக்காததால், அவர்களின் பெயர்களை ஸ்மார்ட் குடும்ப அட்டையில் சேர்க்க முடியவில்லை. எனவே முதியோருக்கு ஆதார் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக அரசு தகவல் தொழில்நுட்பத் துறையின், மின் ஆளுமை முகமை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

முதியோர்களை பொருத்தவரை, 6 விரல்களின் ரேகைகளை பதிவு செய்தால் போதும் என்றும், அவர்களின் ரேகைகளை பொறுமையாக பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறோம். கருவிழியை மட்டும் பதிவு செய்துகொண்டு ஆதார் எண் வழங்கினால், ஏதாவது சேவையை பெற, பயனாளி செல்லும் போது, அங்கு விரல் ரேகை ஸ்கேன் செய்யும் கருவிதான் இருக்கும். கருவிழியை ஸ்கேன் செய்யும் கருவியின் விலை அதிகமானது என்பதாலும், அளவில் பெரியதாக இருப்பதாலும், அதை அவ்வளவாக யாரும் பயன்படுத்துவதில்லை. அதனால் பயனாளிக்கே சிரமம் ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x