Last Updated : 01 May, 2017 09:25 AM

 

Published : 01 May 2017 09:25 AM
Last Updated : 01 May 2017 09:25 AM

தமிழகத்தில் மார்ச் 31 வரை விற்பனை செய்யப்பட்ட பி.எஸ்.3 வாகனங்களை பதிவு செய்ய அனுமதி: வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் நிம்மதி

மார்ச் 31-ம் தேதிக்குள் விற்கப்பட்ட பி.எஸ்.3 வகை வாகனங்களைப் பதிவு செய்துகொள்ள போக்குவரத்துத் துறை அனுமதித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களும், விற்பனையாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

வாகனங்கள் வெளியிடும் புகை மற்றும் மாசு, பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்.) என்று அளவீடு செய்யப்படுகிறது. அதிகரித்து வரும் வாகனப் புகையால் சூழல் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதைக் கருத்தில்கொண்டு, இனி வரும் காலங்களில், வாகனங்களில் ‘பி.எஸ்.4’ வகை இன்ஜின்களை பொருத்த வேண்டும் என 2010-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏப்.1-ம் தேதி முதல் பி.எஸ்.3 வாகனங்களுக்குத் தடை விதித்தது. மார்ச் 29-ம் தேதி நீதிமன்ற உத்தரவு வெளியானதால், அடுத்த 2 நாட்களில் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பி.எஸ்.3 இருசக்கர வாகனங்களை விற்க வேண்டிய சூழலுக்கு வாகன விற்பனையாளர்கள் தள்ளப்பட்டனர். வேறு வழியின்று அவ்விரு நாட்களில் பெரும் தள்ளுபடி விலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் விற்கப்பட்டன.

மார்ச் 30, 31 ஆகிய 2 நாட்களில் அளவுக்கு அதிகமாக வாகன விற்பனை நடைபெற்றதால், ஆன்லைன் மூலம் அவற்றை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விற்பனை செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும், பதிவு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும், சுமார் 41 ஆயிரம் பி.எஸ்.3 வகை வாகனங்கள் தேங்கின. விற்பனை செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என வாகன உற்பத்தியாளர்கள், டீலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, விற்கப்பட்ட பி.எஸ்.3 வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்ய நீதிமன்றம் மூலம் அனுமதி பெறப்பட்டது. அதையடுத்து அங்கு தேக்கமடைந்திருந்த வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல கர்நாடகா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் விற்பனையான வாகனங்களைப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் அந்த அனுமதி கிடைக்காமல் இருந்தது. இதனால் வாகனங்களை வாங்கிவிட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் வாடிக்கையாளர்களும், வாகனத்துக்கான வரியை வசூலிக்க முடியாமல் பல்வேறு பிரச்சினைகளை விற்பனையாளர்களும் எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஏப்.1-ம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட பி.எஸ்.3 வாகனங்களை மட்டும் பதிவு செய்துகொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் இதுகுறித்த அறிவிப்பை போக்குவரத்துத் துறை ஆணையர் அனுப்பி உள்ளார்.

அந்த உத்தரவில், ‘‘மார்ச் 31-ம் தேதிக்கு முந்தைய தினங்களில் பி.எஸ்.3 வாகனங்கள் ஆன்லைன் பதிவு முறையில் ஏற்பட்ட சிக்கலால் படிவம் 20 பதிவேற்றம் செய்வது, வரி செலுத்துவது பாதிக்கப்பட்டது. எனவே உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கோரிக்கையின் அடிப்படையில், மார்ச் 31 வரை விற்கப்பட்ட பி.எஸ்.3 வாகனங்களுக்கு விற்பனைப் படிவம், காப்பீட்டுச் சான்று இருந்தால் அவற்றை தனியே பதிவு செய்துகொள்ளலாம். இந்த வாகனங்களை சாதாரண முறையிலேயே (ஆன்லைன் அல்லாத) பதிவு செய்ய வேண்டும். கணக்கு தணிக்கைக்கு ஏதுவாக, இந்த வகை வாகனப் பதிவுகளுக்கு தனி பதிவேடு பராமரிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த வாகன விற்பனையாளர் ஒருவர் கூறும்போது, ‘‘இந்த அனுமதியால் தேக்கமடைந்திருந்த ஆயிரக்கணக்கான வாகனங்களை பதிவு செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் எத்தனை நாளுக்கு இந்த அனுமதி இருக்கும் என தெரியவில்லை. காட்பாடியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கின் அடிப்படையிலேயே, அரசு இந்த உத்தரவை வழங்கியுள்ளது” என்றார்.

கிராமங்களில் கட்டுப்பாடு குறைவு

வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இயக்கத் தகுதியற்ற வாகனங்களும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. பி.எஸ்.3 வாகனங்களைவிட, அவை அதிக மாசு ஏற்படுத்தக்கூடியவை. அதைத்தான் முதலில் தடை செய்திருக்க வேண்டும். பி.எஸ்.3 வாகனங்களை பதிவு செய்வதில் சிக்கல் இருந்தாலும், கிராமப்புறங்களில் வேறு வழியின்றி பதிவு எண் இல்லாமலேயே பலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். நகரத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதால் பதிவு எண் இல்லாமல் இயக்க முடியாது. அதுவே நகரத்தில் உள்ள வாடிக்கையாளர்களையும், விற்பனையாளர்களையும் வெகுவாக பாதித்துவிட்டது. தற்போது வழங்கப்பட்ட அனுமதி, இந்த சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x