Published : 13 Aug 2016 08:36 AM
Last Updated : 13 Aug 2016 08:36 AM
சட்டப்பேரவையில் நேற்று செய்தி மற்றம் சுற்றுச்சூழல் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அதில் பேசிய வேளச்சேரி தொகுதி திமுக உறுப்பினர் வாகை சந்திரசேகர் பேசும்போது, ‘‘இன்றைய வறட்சி நிலைக்கும் நீராதாரம் குறைவதற்கும் சீமைக் கருவேல மரங்கள் காரணம். அவற்றை வேருடன் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,‘‘ உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, நீர்நிலைகளின் கரை களில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன’’ என்றார்.
தொடர்ந்து விவாதம் நடந்த நிலையில், இறுதியாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,‘‘ நீர்நிலைப்பகுதிகள், வனப்பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நீர்நிலைகளில் 89 ஆயிரத்து 900 ஏக்கர் பரப்பிலும், கரைகள், காப்புக்காடுகள் என 46 ஆயிரம் ஏக்கர் பரப்பிலும் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை படிப்படியாக அகற்றி அங்கு, பலவகை மரக்கன்றுகள் நடப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT