Published : 22 May 2017 01:06 PM
Last Updated : 22 May 2017 01:06 PM

தமிழக அரசுப் பள்ளிகளில் 3-ம் வகுப்பு முதல் கணினி பாடங்கள் கற்றுத்தரப்பட வேண்டும்: அன்புமணி

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாக இடம் பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் கணினி அறிவியல் பாடத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர். கல்வியின் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் ஒருங்கிணைந்த ஒன்றாக மாறிவிட்ட நிலையில், கணினி அறிவியல் பாடத்தை தமிழக அரசு பாடத்திட்டத்தில் சேர்க்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

1980-ஆம் ஆண்டுகளில் கணினி அறிமுகம் செய்யப்பட்ட போது அது பெரும்பான்மையான மனிதர்களுக்கு தொடர்பில்லாத கருவியாக இருந்தது. ஆனால், இப்போது கல்வியைத் தாண்டி கணினி என்பது மனித வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டது.

இதை உணர்ந்ததால் தான் 2011-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை கணிப்பொறியியல் பாடத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.

அதன்படியே அதற்கான பாடநூல்களும் அச்சிடப்பட்டன. ஆனால், பாடநூல்கள் மட்டும் தான் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதே தவிர, கணிப்பொறியியல் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படவில்லை. இதற்குக் காரணம் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை வருவாய் ஈட்ட பயன்படும் துறையாக இருந்ததே தவிர, வளர்ச்சிக்கு வழி வகுக்கும் துறையாக இல்லை என்பது தான்.

தமிழ்நாட்டில் கூட அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதலே கணினிப் பாடம் கற்றுத்தரப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்தியாலா பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் நடத்தப்படுகிறது.

2015-ஆம் ஆண்டு இறுதி வரை மொத்தம் 39,019 பேர் கணினி ஆசிரியர்களாக நியமிக்க தகுதி பெற்று பதிவு செய்து வைத்துள்ளனர். ஆனால், கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படாததால் அவர்கள் இன்று வரை வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கணினி படித்த ஆசிரியர்கள், கணினி படிக்க விரும்பும் மாணவர்கள் என இரு தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு வரும் கல்வியாண்டில் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலையும் ஒரு பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி மருத்துவம், பொறியியல், கலை - அறிவியல் உள்ளிட்ட எந்தப் பட்டப்படிப்பாக இருந்தாலும் அதில் 3 முதல் 6 மாதங்களுக்கான கணினிக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான கணினி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

அத்துடன் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சுமார் 17,000 பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிலைப்பு செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்"

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x