Published : 06 Feb 2017 06:39 PM
Last Updated : 06 Feb 2017 06:39 PM
ரேஷன் கடைகளில் அனைத்து நாட்களும் பாமாயில், பருப்பு போன்ற பொருட்களை இருப்புவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றை கடந்த சில மாதங்களாக சரிவர கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். அரசால் ரூ.30க்கு வழங்கப்படும் பருப்புகளை ரேஷன் கடைகளில் இருப்பு இல்லாததால் ரூ.100 கொடுத்து தனியார் நிறுவனங்களில் வாங்கும் நிலைக்கு ஏழைமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 33,973 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 1.98 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைந்து வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தின் பெரும்பாலான ரேஷன் கடைகளில் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் மட்டும் தான் அனைத்து பொருட்களும் கிடைக்கிறது. அதன்பிறகு இருப்பு இல்லை என திருப்பி அனுப்பும் நிலை நிலவி வருகிறது.
இதன்காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மாதத்தின் முதல் தேதி முதல் மூன்றாம் தேதிவரை காலை 6 மணிமுதலே பெரும் கூட்டமாக ரேஷன் கடைகளில் காத்துக்கிடக்கிறார்கள். தற்போது பிப்ரவரி 1-ம் தேதியிலேயே பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு இல்லை என்றும், அரசி மற்றும் சர்க்கரையை மட்டும் வாங்கிச் செல்லுங்கள் என்றும் ரேஷன் கடை ஊழியர்களால் கூறப்பட்டுவருகிறது.
எனவே, தமிழக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சமையலறையில் பெரும் பங்கு வகிக்கும் ரேஷன் பொருட்களை, ரேஷன் கடைகளுக்கு மாதாமாதம் சரியான முறையில் விநியோகம் செய்யவும், மாதத்தின் அனைத்து நாட்களிலும் அனைத்துப் பொருட்களும் இருப்பு வைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அப்துல் சமது கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT