Published : 14 Mar 2014 08:39 PM
Last Updated : 14 Mar 2014 08:39 PM

மேலும் 32 தமிழக மீனவர்கள் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்



இலங்கை யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.



தமிழக - இலங்கை இருநாட்டு மீனவர்களின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 27 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை சிறைச்சாலைகளில் 177 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், தமிழக முதல்வர் கொழும்பில் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்தார்.



ஆனால் இலங்கை தமிழக மீனவர்களை விடுதலை செய்ய தாமதப்படுத்தியதால் மார்ச் 13 அன்று கொழும்பில் நடைபெற வேண்டிய இந்திய-இலங்கை இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.



அதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவல் முடியும் முன்னே 116 தமிழக மீனவர்கள் புதன்கிழமையும், 24 மீனவர்கள் வெள்ளிக்கிழமையும் இலங்கை நீதிமன்றங்கள் விடுதலை செய்தது.



இந்நிலையில் நீதிமன்ற காவல் முடியும் முன்னரே வெள்ளிக்கிழமை தமிழக மீனவர்கள் 32 பேர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.



பின்னர் இலங்கை நீதித்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் 116 பேரையும் அவர்களின் 8 விசைப்படகுகளையும் விடுதலை செய்து நீதிபதி லெனின்குமார் உத்தரவிட்டார்.



தற்போது விடுதலை செய்யப்பட்ட 172 மீனவர்களும் மார்ச் 17 அன்று தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 5 மீனவர்கள் மட்டும் போதை பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பெயரில் நீர் கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x