Published : 10 Sep 2016 08:36 PM
Last Updated : 10 Sep 2016 08:36 PM
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று மாரியப்பன் தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பாரா ஒலிம்பிக் எனும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 61 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4300 வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் 19 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதில் உயரம் தாண்டும் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் திவட்டிபட்டியை அடுத்த பெரிய வடக்கம்பட்டி எனும் சிற்றூரில் இருந்து ரியோவுக்குச் சென்று, இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று காட்டிய அவரது சாதனையின் மூலம் தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போன்று வெண்கலப் பதக்கம் பெற்று நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ள வருண்சிங்குக்கும் பாராட்டு தெரிவிக்கின்றேன்.
விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட இளைஞர்களை மத்திய மாநில அரசுகள் கண்டறிந்து, இளம் வயதில் இருந்து முறையாகப் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தினால் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று சாதிப்பார்கள் என்பதற்கு மாரியப்பன் தங்கவேலு, வருண்சிங் இருவரும் அடையாளமாக விளங்குகிறார்கள்'' என்று வைகோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT