Last Updated : 24 Dec, 2013 12:00 AM

 

Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM

சுனாமி பாதிப்பு: மீண்டு வந்தார்களா மீனவர்கள்? - இயற்கையின் கோரத் தாண்டவம் நிகழ்ந்து 9-ம் ஆண்டு நிறைவு

ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த சுனாமி நிகழ்ந்து நாளையுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2004 டிசம்பர் 26ல் விடிந்த காலைப்பொழுது கடற்கரையோர மக்களுக்குக் கருப்பு நாளாக அமைந்தது.

சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மக்களின் மனங்களில் நீங்கா வடுவாகப் பதிந்துவிட்டது இந்தச் சுனாமி. கடல் கொண்டதில் உயிரிழந்தவர்களின் 10வது ஆண்டு நினைவுநாள் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

சுனாமியால் 51 மீனவக் கிராமங்கள் பாதிப்புக்குள்ளாயின. 610 மீனவர்கள் இறந்தனர். 38 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. சுமார் 1 லட்சம் மீனவர்களின் உடமைகள் சேதமடைந்தன.

நிவாரணப்பணியாக அப்போது அரசு 61,054 மீனவக் குடும்பங்கள் தற்காலிகக் குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டு, உணவு, உடுப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கியது. வீடிழந்த மீனவர்களுக்கு ஏராளமான தொண்டு நிறுவனங்கள் வீடுகள் கட்டிக் கொடுத்ததன.

கடலூர் மாவட்டத்தில் அப்போதைய ஆட்சியர் ககன்தீப்சிங் பேடி மேற்கொண்ட முயற்சியால் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் கடலூரை நோக்கிப் படையெடுத்தன. இவர்கள் 2502 நிரந்தரக் குடியிருப்புகளைக் கடற்கரையை ஒட்டி கட்டி கொடுத்தனர். இதுதவிர சுனாமியில் தாய் தந்தையரை இழந்த 114 மாணவ, மாணவியரை அரசே தத்தெடுத்துச் சமூக நலத்துறை மூலம் அவர்களைப் பராமரித்து வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் பள்ளிப்படிப்பை முடித்துச் சிலர் கல்லூரி செல்கின்றனர். சிலருக்குத் திருமணமாகிவிட்டது. இன்றைய நிலையில் 34 மாணவிகள் சமூக நலத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

பலகட்ட நடவடிக்கைகளால் மீனவர்களது வாழ்க்கை முறை யிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரமான சுற்றுப்புறச்சூழலில் வசிக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் நகர்ப்புற வாசிகளின் மனோபாவத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சுத்தமான உடைகள் அணிவது, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொண்டது, கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது என மாவட்டத்தின் இதர பகுதி மக்களுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர். பலரது குழந்தைகள் உயர்கல்வி பயில்கின்றனர்.

இருப்பினும் தாங்கள் வசிக்கும் பகுதி தனிமையாக உள்ளது. போக்குவரத்து வசதி, மருத்துவமனை வசதிகள் இல்லை என்பது அப்பகுதி மக்களின் குறையாக உள்ளது. இதுதொடர்பாகக் கடலூர் மீனவர் பேரவைத் தலைவர் சுப்பராயனிடம் கேட்டபோது, “வீடிழந்த மீனவர்களுக்காக அரசு சார்பில் செல்லங்குப்பத்தில் கட்டப்பட்டு வரும் 1589 குடியிருப்புகள், 9 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் ஏனைய மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை. குறுகிய சாலை வசதியுடன் தரமற்ற முறையில் கட்டப்படுகிறது.

இந்தக் குடியிருப்புகள் பெயரளவுக்கே கட்டப்படுகிறது. ஏற்கெனவே தொண்டு நிறுவனங்கள் கட்டிக் கொடுத்த குடியிருப்பு பகுதிகளுக்கு வசதிகளையும், சுனாமி நினைவுச் சின்னமும் அமைக்கக் கடலூர் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தொண்டு நிறுவனங்களும், அரசும் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக மீனவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது ஒரு புறம் உண்மையென்றாலும் இன்னும் நிறைவேற்றப்படவேண்டிய கோரிக்கைகளும் எழாமல் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x