Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM
புதுவை அரசியலில் எதிரும் புதிருமாக நின்ற ரங்கசாமி, நாராயணசாமி, ஆளுநர் வீரேந்திர கட்டாரியா ஆகியோர், திங்களன்று நடந்த அரசு விழாவில் எந்நாளும் இல்லாத திருநாளாக கட்டி யணைத்துக்கொண்டார்கள். இந்தத் திடீர் பாசத்தின் பின்னணியை விசாரித்தால் பல தகவல்கள் கிடைக்கின்றன.
காங்கிரஸும் பாஜக-வும் தமிழகத்தில் விஜயகாந்தை வளைக்க வட்டமிடுவதைப் போல புதுவையில் ரங்கசாமியின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள்தான் வெற்றிபெற முடியும் என்கிற நிலை. இந்த சூட்சுமத்தைப் புரிந்துகொண்டுதான் என்ஆர்.காங்கிரஸுக்கு எல்லா கட்சி களும் வலை வீசுகின்றன.
புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், ஓம்சக்தி சேகர் ஆகியோர் ``என்.ஆர்.காங்கிரஸை ஆட்சியில் அமர்த்திய அதிமுக-வை ரங்கசாமி ஆதரிக்க வேண்டும்’’ என்று கோரி யுள்ளனர்.
சமீபத்தில் காரைக்காலில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பாமக வேட்பாளர் அனந்தராமன், ``என்.ஆர்.காங்கிரஸ் நம்மைத்தான் ஆதரிக்கும்’’ என்று பாமக-வினருக்கு ஆருடம் சொல்லிவிட்டுப் போனார்.
இதற்கிடையில், பாஜக-வும் ரங்கசாமி தரப்பிடம் தொடர்ந்து பேசி வருகிறது. அனைவருக்கும் தனது டிரேட்மார்க் சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுக்கும் ரங்கசாமி, ‘என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்’ என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம்.
ஆளுநர் வீரேந்திர கட்டாரியா மூலமாக பேசி ரங்கசாமியை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரவைத்த நாராயணசாமி, அந்த விழாவில் மூவரும் கட்டி அணைத்து அன்பை (செயற்கையாக) பொழிந்து கொண்டதும், ரங்கசாமியின் ஆதரவை பெறுவதற்காகவே என்றும் சொல்லப்படுகிறது.
``இதற்கெல்லாம் மசியும் ஆள் இல்லை எங்கள் ரங்கசாமி. 12-ம் தேதி புதுவை பட்ஜெட் கூட்டம் இருக்கிறது. அதை சுமூகமாக முடித்துவிட்டுத்தான் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பார்’’ என்கிறார்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT